எடியூரப்பாவின் திடீர் முடிவால் விபரீதம்.. பெங்களூர் to உ.பி... நடந்தே செல்லும் பரிதாப தொழிலாளர்கள்
பெங்களூர்: புலம்பெயர் தொழிலாளர்களை, பெங்களூரில் இருந்து உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடிய ரயில்களை திடீரென முதல்வர் எடியூரப்பா ரத்து செய்தார். இதை அடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லக்கூடிய காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு ரயில்வே துறை, ரயில்களை இயக்கி உதவி வருகிறது. ரயில் புறப்படும் மாநிலம் மற்றும் சேரக்கூடிய மாநிலம் ஆகிய இரு மாநில அரசுகளும் சம்மதித்தால் மட்டுமே, சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்குகிறது.
இப்படித்தான், உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டன.
தொழிலதிபர்கள் சந்திப்பு
அரசின் அறிவிப்பை நம்பி ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் நிலையம் வர தொடங்கினர். ஆனால் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொழில்கள் துவங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ரியல் எஸ்டேட் அதிபர்கள், கட்டுமான தொழில் தலைவர்கள் போன்றோரின் அமைப்பு பிரதிநிதிகள் எடியூரப்பாவை சந்தித்தனர்.
தொழில் தொடங்க தொழிலாளர்கள் தேவை
இந்த ஆலோசனையின்போது, ஊரடங்கு காலகட்டத்தில், தாங்கள் சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக இந்தத் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வசதி ஏற்படுத்திக் கொடுத்ததாகவும், தற்போது தொழில் துவங்க கூடிய நேரத்தில் அவர்களை ஊருக்கு அனுப்பினால், தொழிலை நடத்த முடியாது என்றும் தெரிவித்தனர். இதையடுத்து திடீரென சிறப்பு ரயில்கள் ரத்து செய்யும் கோரிக்கையை எடியூரப்பா வைத்தார்.
ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர் தூரம்
இதையடுத்து இன்று முதல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். எப்படியும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கானோர் பெங்களூரிலிருந்து நடக்க ஆரம்பித்து விட்டனர். பெங்களூரிலிருந்து உத்தரபிரதேச மாநிலம் வரை நடந்து செல்வதென்றால் சுமார் 1500 கிலோ மீட்டருக்கும் மேல் தொலைவு இருக்கிறது. அப்படி இருந்தும் இந்த தொழிலாளர்கள் நடந்தே செல்கின்றனர்.
|
வீடியோ வெளியீடு
காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ கிருஷ்ண பைரே கவுடா என்பவர் இப்படி நடந்து சென்ற தொழிலாளர்களை, பார்த்து பேசி, அந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அரசு தங்களை கைவிட்ட போதிலும் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்பதால் நடந்தே சொந்த ஊருக்கு செல்கிறோம் என்று அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.
கொத்தடிமைத்தனம்
இதனிடையே திடீரென சிறப்பு ரயில்களை ரத்து செய்து, தொழிலாளர்களை இங்கேயே இருக்கச் செய்ய கட்டாயப்படுத்துவது என்பது கொத்தடிமைத்தனத்துக்கு ஈடானது என்று கர்நாடக பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், இதே தொனியில் அரசை கண்டித்துள்ளார்.