அடடே.. இன்றும் அந்த நல்ல சேதி பெங்களூரில் நடந்துவிட்டதே.. ஆனாலும் திருப்தியில்லை!
பெங்களூர்: கடும் கோடை வெப்பம் தகித்து வந்த பெங்களூருவில் இரண்டாவது நாளாக இன்றும், மிதமான மழை பெய்துள்ளது மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பெங்களூரில் இந்த வருடம் கோடைகாலத்தில் மிக கடுமையான வெப்பம் சுட்டெரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பெங்களூரில் அதிகபட்சமாக 35.6 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது.
அதே நேரம் மாலை 4 மணிக்கு மேல் திடீரென மேகக்கூட்டங்கள் ஒன்றுகூடி, இடியுடன் நகரின் சில பகுதிகளில் லேசான தூறல் விழுந்தது. குறிப்பாக, பனசங்கரி பன்னேர்கட்டா சாலை, மடிவாளா, பொம்மனஹள்ளி, பேகூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.
சாரல் மழை
இந்த நிலையில் இன்றும் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் மாலை 4 மணி அளவில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை பெங்களூரில் வழக்கமாக பெய்யும் மழை போல இல்லாமல், சாரல் மழை போன்றுதான் இருந்தது.
வெப்பத்தை கிளப்புகிறது
நிலத்தில் இருந்த வெப்பத்தை அது கிளப்பி விட்டு விட்டது. மழை அளவு அதிகரித்தால் வெப்பம் குறையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் இந்த ஆண்டு, இதுவரை பெங்களூரில் பெரிய மழை பதிவாகவில்லை.
முதல் மழை
இருப்பினும் இந்த கோடை காலத்தில் பெங்களூர் மக்கள் முதல் முறையாக நேற்றும் இன்றும் மழையைப் பார்த்த மகிழ்ச்சியில் உள்ளனர். புற்கள் மற்றும் மரங்களுக்கு இந்த சாரல் மழை ஓரளவுக்கு பலன் தரக் கூடும். ஆனால் வெப்பத்தைக் குறைப்பதற்கு போதிய அளவில் இல்லை என்று மக்கள் தங்கள் வருத்தத்தை தெரிவிக்கிறார்கள்.
நாளைக்கும் மழைக்கு வாய்ப்பு
நாளையும் கூட மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே, இன்று இரவு அல்லது நாளை நல்ல ஒரு கன மழை பெய்தால் அது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கும்.