மோடி, அமித்ஷாவையே பணிய வைத்த 'ராஜ புலி' எடியூரப்பா.. புகழ்ந்து தள்ளும் கன்னட மீடியாக்கள்!
பெங்களூர்: 'ராஜ புலி..' இதுதான் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு, கடந்த சில நாட்களாக, கன்னட மீடியாக்கள் வைத்துள்ள செல்லப் பெயர்.
புலி போன்ற சீற்றத்தோடு, வச்ச குறியை தப்பாமல் ஆட்சியை பிடித்துள்ளார் எடியூரப்பா என்பது மட்டும் இதற்கு காரணம் இல்லை. அகில இந்தியாவிலும் வெற்றிக் கொடி நாட்டிய ராஜதந்திரி அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரையும், தனது இழுப்புக்கெல்லாம் ஆட வைத்துள்ளார் எடியூரப்பா என்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.
எனவேதான் எடியூரப்பாவின் பராக்கிரமங்களை புகழ்ந்து சிலாகிக்கின்றன கன்னட எலக்ட்ரானிக், ஆன்லைன், பிரிண்ட் மீடியாக்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
நேற்று, கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார்.. இன்று வெங்கையா நாயுடு.. கண்ணீர் விட்ட தலைவர்கள்
பிற மாநிலங்கள்
நாடு முழுக்க பாஜகவை தங்கள் பிடியில் வைத்துள்ளவர்கள் அமித்ஷா-மோடி ஜோடி. பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலுமே தங்கள் விருப்பப்படிதான் முதல்வர் தேர்வு உட்பட அனைத்தும் நடக்க வேண்டும் என்ற அணுகுமுறையை வைத்துள்ளவர்கள். உதாரணத்திற்கு, மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினர் அதிகப்படியாக இருந்தாலும், பிராமண சமூகத்தை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக்கப்பட்டார். நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில், எம்.பியாக இருந்த யோகி ஆதித்யநாத்துக்கு முதல்வர் பதவி தேடி வரும் என்று யாராவது நினைத்திருப்பார்களா? ஆனால் அப்படித்தானே நடந்தது. அசாமில், சக்திவாய்ந்த தலைவரான ஹிமாந்தா பிஸ்வா சர்மா, செல்வாக்கு குறைந்த சர்பானந்தா சோனோவாலின் கீழ் பணியாற்ற பணிக்கப்பட்டார்.
யூகிக்க முடிந்த தேர்வு
பிற மாநிலங்களில் யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு இருந்தது பாஜக தலைமையின் முதல்வர் தேர்வு. கர்நாடகாவில் மட்டும் எடியூரப்பாவை விட்டால் வேறு யாருமே சிஎம் ஆக முடியாது என்பது சிறு குழந்தைக்கு கூட தெரிந்திருந்தது. கர்நாடகாவில் பெரும்பான்மையான ஜாதி லிங்காயத்து. அதே ஜாதி பிரிவை சேர்ந்த எடியூரப்பாவைதான் முதல்வராக்கியுள்ளார்கள் அமித்ஷா-மோடி ஜோடி. பிற மாநிலங்களில் செய்ததை போல சொந்த முடிவுகளை இங்கே எடுக்க முடியவில்லை.
வயது உச்ச வரம்பு தளர்வு
75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்திய அமைச்சர், முதல்வர் உள்ளிட்ட பதவிகளில் இருக்க கூடாது என்பது 2014 முதல் பாஜகவில் உள்ள எழுதப்படாத விதிமுறை. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட பலரும் இந்த விதிமுறையால், ஆட்சி அதிகாரத்தை ருசிக்க முடியவில்லை. ஆனால், எடியூரப்பாவுக்காக மட்டுமே அந்த விதிமுறையை தகர்த்துள்ளார் அமித்ஷா.
மோடிக்கு சொன்ன நோ
குமாரசாமி ஆட்சி கலைந்ததும், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி, பொதுத் தேர்தலை நடத்தி வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது மோடி விருப்பம். அப்படி செய்தால், எம்எல்ஏ பதவிகளை பறிகொடுத்த காங்கிரஸ், மஜத அதிருப்தி எம்எல்ஏக்களும் தேர்தலில் போட்டியிட முடியும் என நினைத்தார் மோடி. ஆனால், ஒப்புக்கொள்ளவில்லை எடியூரப்பா. இப்போதே நான் முதல்வராக வேண்டும் என்றார். எடியூரப்பாவின் பிடிவாதம் முன்பாக மோடியால் கூட பேச முடியவில்லை.
எடியூரப்பாவின் மக்கள் பலம்
இப்படியெல்லாம், எடியூரப்பாவுக்காக தாங்கள் வகுத்த அத்தனை, விதிமுறைகளையும், வளைத்து, எடியூரப்பாவிடம் அமித்ஷாவும், மோடியும், சரணடைந்ததால்தான், கன்னட மீடியாக்கள் எடியூரப்பாவை ராஜ புலி என வர்ணிக்கின்றன. எடியூரப்பாவை ஒருமுறை அப்போதைய பாஜக தலைமை பகைத்துக் கொண்டு கையில் சூடு வைத்த கதை அமித்ஷா, மோடிக்கு நன்கு நினைவு இருக்கிறது. தனிக்கட்சி துவங்கி சில மாதங்களில், சட்டசபை, பொதுத் தேர்தலை சந்தித்து 10 சதவீத வாக்குகளை அள்ளினார் எடியூரப்பா. இத்தனைக்கும் அவர் மீது அப்போது ஊழல் வழக்குகள் நிலுவையில் இருந்தபோதிலும், மக்கள் அப்படி ஒரு ஆதரவை அளித்தனர். இப்போது எடியூரப்பா மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் இல்லை. அத்தனையிலும் அவர் நிரபராதியாகியுள்ளார். பின்ன.. புலி உறுமலை யாரால்தான் கட்டுப்படுத்த முடியும்?