டாக்டரை கூட பார்க்க விட மாட்டார்கள்.. ஐடி ரெய்டின் மறுபக்கம்.. மோகன் தாஸ் பை ஆவேசம்
Recommended Video
பெங்களூர்: கஃபே காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தா மர்மமாக மரணமடைந்துள்ள நிலையில், வருமான வரி சோதனைகள் மற்றும் அப்போது கொடுக்கப்படும் நெருக்கடிகள் பற்றி சர்ச்சை வெடித்துள்ளது.
ஜூலை 27 தேதியிட்ட கஃபே காஃபி டே போர்டுக்கு சித்தார்த்தா, எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், "என் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரையும் கைவிட்டதற்கு, நான் மிகவும் வருந்துகிறேன். நான் நீண்ட காலமாக போராடினேன், ஆனால் கடன் கொடுத்தவர்களிடமிருந்து கடுமையான அழுத்தம் எனக்கு வருவதால் நான் இந்த முடிவை எடுக்கிறேன். " என்று கூறப்பட்டிருந்தது.
சித்தார்த்தா தனது கடிதத்தில், முந்தைய வருமான வரி டி.ஜி. தொல்லை தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆரின் கேபிடல், தலைவர் மோகன்தாஸ் பாய் இதுபற்றி கூறுகையில், "வருமான வரி அதிகாரிகள் தனிநபர்களை சோதனைக்கு உட்படுத்தும்போது நடந்துகொள்ளும் முறை குறித்து பல திடுக்கிடும் தகவல்களை கேள்விப்பட்டேன்.
தொல்லையை எதிர்கொண்ட பல சாட்டட் அக்கவுண்ட்டன்ட் நண்பர்கள் என்னிடம் இதுபற்றி சொல்லியுள்ளார்கள்.
சில நேரங்களில் அதிகாரிகள், 24 முதல் 36 மணி நேரம் அடைத்து வைத்துள்ளார்கள். அவர்கள் உணவை உள்ளே கொண்டு வர அனுமதிக்க மாட்டார்கள், டாக்டர்களை உள்ளே வர அனுமதிக்க மாட்டார்கள். மிகவும் முரட்டுத் தனமாக நடந்து கொள்வார்களாம்.
அவர்கள் சோதனைக்கு உள்ளாகும் நபர்களை அடித்து துன்புறுத்தி, ஆவணங்களில் கையெழுத்திட கட்டாயப்படுத்தியுள்ளனர். ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அரசாங்கத்தால் ஒரு தெளிவான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டியது இன்று நமக்குத் தேவை என்று நான் நினைக்கிறேன். நம்மை பாதுகாப்பதற்காக நாம் அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். அவர்களின் வரி அதிகாரிகளால் இத்தகைய தொல்லைக்கு நாம் உள்ளாக முடியாது.
வருமான வரி அதிகாரிகள் உங்களிடம் வரும்போது அவர்கள் உங்கள் வழக்கறிஞருடன் பேச அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட ஒரு தெளிவான நெறிமுறை இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நமது உரிமைகளை வழங்கி கண்ணியமாக நடத்துங்கள். மக்களை குற்றவாளிகள் என்று கருதக்கூடாது என்றார் மோகன் தாஸ் பை.