லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி- கர்நாடகா, ம.பி. அரசுகள் கவிழ்க்கப்படும் அபாயம்?
பெங்களூரு/ போபால்: லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி. இதனைத் தொடர்ந்து நூலிழைப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தும் கர்நாடகா மற்றும் மத்திய பிரதேச அரசுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு ஆட்சியை கவிழ்க்க பாஜக பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ராகுல் காந்தி செய்த தப்பு இதுதான்.. உடனடி தேவை அமித் ஷா போன்ற திட்டமிடல் திறமை!
கர்நாடகா அரசு கவிழ்ப்பு?
இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்துள்ளது. கர்நாடகா சட்டசபையில் பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் 79., மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 எம்,.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள அரசுக்கு பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவும் உள்ளது.
ஆட்சி அமைக்க பாஜக முயற்சி
இருப்பினும் தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜக தொடர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது. 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் போதும்.. ஆட்சி அமைத்துவிடலாம் என்கிற நிலை உள்ளது. லோக்சபா தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை பாஜக படுதீவிரமாக முன்னெடுக்கும் என்றே தெரிகிறது.
பாஜக சவால்
மத்திய பிரதேசத்தில் எக்ஸிட் போல் முடிவுகள் வந்தபோதே ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக குடைச்சல் கொடுத்துவிட்டது. முதல்வர் கமல்நாத் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு பாஜக கடிதம் அனுப்பியது.
பாஜக படு தீவிர முயற்சி
231 எம்.எல்.ஏக்களை கொண்ட ம.பி. சட்டசபையில் பாஜகவுக்கு 109 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சி சுயேட்சைகள், பகுஜன் சமாஜ் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது. இதனால் மத்திய பிரதேசத்திலும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை பாஜக படுஜரூராக மேற்கொள்ளக் கூடும்.