காங். எம்.எல்.ஏ.க்கள் சிறைவைப்பு- பெங்களூருவை மையம் கொள்ளும் ம.பி. புயல்
பெங்களூர்: மத்திய பிரதேசத்தில் ஆட்சி கவிழுமா இல்லையா என்பதை பெங்களூருவில் சிறை வைக்கப்பட்டுள்ள 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்தான் தீர்மானிக்க உள்ளனர். மத்திய பிரதேச அரசியல் என்பது இப்போது பெங்களூருவை மையமாக கொண்டுள்ளது.
மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 4 பேரை டெல்லியில் இருந்து கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது பாஜக. கர்நாடாவில் பாஜக ஆட்சி என்பதால் எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு என கருதி அனுப்பி வைத்திருக்கலாம்.
அதேநேரத்தில் எம்.எல்.ஏக்களை கடத்தி ராஜினாமா செய்ய வைத்து அதிகாரத்துக்கு வந்தது கர்நாடகா பாஜக அரசு. ஆகையால் எம்.எல்.ஏக்கள் கடத்தல் விவகாரத்தில் அனுபவசாலியான கர்நாடகா பாஜக வசம் இந்த பொறுப்பையும் ஒப்படைத்திருக்கலாம்.
இந்த எம்.எல்.ஏக்கள் கடத்தலுக்கு மூளையாக கை நீட்டப்படுகிற ம.பி. பாஜக மூத்த தலைவர் நரோட்டம் மிஸ்ராவோ, நான் டெல்லியில்தான் இருக்கிறேன்; என்னுடைய ஓட்டுநரும் டெல்லியில்தான் இருக்கிறார்; எந்த கட்சி எம்.எல்.ஏ.வும் என்னை சந்திக்கலாம் என அசால்ட்டாக பதில் கூறியிருக்கிறார். அத்துடன் இல்லாமல், காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு எம்.எல்.ஏக்கள் மத்திய பிரதேசத்தில் இருந்து வெளியேறியிருக்கலாம் என புது குண்டையும் வீசியுள்ளார்.
ஆனால் மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங்கோ, நரோட்டம் மிஸ்ராதான் ஹோட்டலில் பணத்துடன் காத்திருப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார். பாஜகவின் கண்ணாமூச்சு ஆட்டம் இப்போது பெங்களூருவில் நிலை கொண்டிருக்கிறது.
இதனிடையே மத்திய பிரதேச அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் கமல்நாத் டெல்லி விரைந்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் மேலிடத்துடன் இது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.