ஜன.29 உங்களுக்கு கடைசி நாள்.. குமாரசாமி, பிரகாஷ் ராஜ் உட்பட 15 பேருக்கு கொலை மிரட்டல்.. திக் கடிதம்
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 15 பேருக்கு மர்ம நபர் விடுத்த கொலை மிரட்டல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 15 பேருக்கு மர்ம நபர் விடுத்த கொலை மிரட்டல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவை மையமாக கொண்டு நிறைய இந்து மடங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சில மடங்கள் அரசியல் ரீதியாக நிறைய முடிவெடுக்கும் சக்தியை கொண்டது. அந்த வகையில் முக்கியமான மடமாக பார்க்கப்படும் பெலகாவியில் உள்ள லிங்காயத்துகளின் கிட்டூர் நிஷ்கல் மண்டப படத்திற்கு இன்று மிரட்டல் கடிதம் ஒன்று சென்றுள்ளது.
மர்ம நபர் எழுதி உள்ள அந்த கடிதத்தில், இந்த மடத்தின் அதிபர் நிஜகுணந்த சாமிக்கும் அவரின் தொண்டர்களுக்கும் நாங்கள் எச்சரிக்கை விடுகிறோம். நீங்கள் உங்கள் மதத்தை அவமதித்துவிட்டீர்கள். உங்கள் பின்தொடர்பாளர்களும் இந்து மதத்தை அவமதித்துவிட்டனர்.
இதற்கு உங்களுக்கு சரியான தண்டனை அளிக்கப்டும். வரும் ஜனவரி 29ம் தேதிதான் நீங்கள் கடைசியாக மூச்சு விடுவீர்கள். கீழே இருக்கும் பட்டியலில் உள்ளவர்களும் அதே நாளில் கொலை செய்யப்படுவார்கள். உங்கள் பயணம் முடிய போகிறது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி, நடிகர் பிரகாஷ் ராஜ், சிபிஐ மூத்த உறுப்பினர் பிருந்தா காரத், பஜ்ரங் தளம் மூத்த தலைவர் மஹிந்திரா குமார், நீடுமமிடி சுவாமி, ஜெய்பிரகாஷ சுவாமி, நடிகர் சேட்டன் குமார், பிடி லலிதா நாயக், மகேஷ் சந்திரா குரு உட்பட 15 பேருக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் எதற்காக விடுக்கப்பட்டது. யார் விடுத்தது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த மிரட்டல் தொடார்பாக் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த லிஸ்டில் இருக்கும் 15 பேருக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த மிரட்டலுக்கு குமாரசாமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யாரோ எங்களை பழிவாங்க வேண்டும் என்று இப்படி திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.