இதுதாங்க சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்.. மோடி பற்றி கர்நாடக முதல்வர் கடும் விமர்சனம்
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடி ட்வீட் வெளியிட்டுள்ளார் கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி.
கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் இன்று அதிரடியாக வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.
இதனால் கர்நாடக முதல்வர் குமாரசாமி கடும் கோபமடைந்துள்ளார்.
கோபம்
இது தொடர்பாக முதல்வர் குமாரசாமி ட்விட்டரில் கூறுகையில், தேர்தல் நேரத்தில் ஊழல் அதிகாரிகளை கொண்டு, எதிர்த்தரப்பை பயமுறுத்த, வருமான வரி சோதனை ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. வருமானவரி சோதனைகள் மூலமாக பிரதமர் மோடி உண்மையான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியுள்ளார், என்று கூறப்பட்டுள்ளது.
அவிங்களுக்கு சின்ன வாய்ப்பும் கொடுக்காதீங்க.. நாட்டை பழைய மாதிரி மாற்றிவிடுவார்கள்.. மோடி ஆவேச உரை
|
நேற்றே சொன்னார்
முன்னதாக நேற்று, ஒரு ட்வீட்டில், குமாரசாமி கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி வருமான வரி துறையை, அரசியலின் எதிர்க்கட்சி தலைவர்களை பயமுறுத்த பயன்படுத்தி வருகிறார். அதுவும் குறிப்பாக தேர்தல் நேரத்தில். எங்களது முக்கியமான தலைவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்கள். இது முழுக்க முழுக்க பழிவாங்கும் அரசியல். இதனால் நாங்கள் பணிந்து செல்ல மாட்டோம். என்று ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.
அமைச்சர், அதிகாரிகள்
அவர் கூறியதை போலவே இன்று ரெய்டுகள் நடக்கின்றன. கர்நாடக அமைச்சர் புட்டராஜுவின் மண்டியா இல்லம் மற்றும் அலுவலகங்கள், மைசூரில் உள்ள அவரின் உறவினர் வீடு மற்றும், அலுவலகங்கள், மற்றும், பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி வருமான வரி சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
காங்கிரசும் கண்டனம்
அதேபோல காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ட்வீட்டில், இந்திய வரலாற்றில் முதல் முறையாக பிரதமர் ஒருவர், தன்னாட்சி கொண்ட நிறுவனங்களை தனது, விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டிப்படைத்து வரும் அவலம் நிகழ்ந்துவருகிறது என்று கூறப்பட்டுள்ளது.