விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் தேசிய வங்கிகள் குளறுபடி.. பிரதமரை பொறுப்பாக்கிய குமாரசாமி
பெங்களூரு: விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் விவகாரத்தில் தேசிய வங்கிகள் செய்து வரும் குளறுபடிகளுக்கு, பிரதமர் மோடி தான் பொறுப்பேற்க வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி ஏதும் அமைக்காமல் தனித்தனியாக தான் போட்டியிட்டன.
ஆனால் தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததையடுத்து, மதவாத சக்தி ஆட்சியில் இருக்க கூடாது என்ற அடிப்படையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி உருவானது. தேர்தலக்கு பிந்தைய இந்த கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த காங்கிரஸ், முதல்வர் பதவியையும் குமாரசாமிக்கு விட்டு கொடுத்தது
இதனையடுத்து கூட்டணி ஆட்சி அமைந்ததும், இரு கட்சிகளும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் பகுத்தாய்வு செய்யப்பட்டு குறைந்தபட்ச செயல்திட்டமும் வகுக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது குமாரசாமி தாம் ஆட்சிக்கு வந்தால், 24 மணி நேரத்திற்குள் விவசாய கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
அடையாள போராட்டம் மட்டும் நடத்திவிட்டு மருத்துவ சேவைகளை தொடருங்கள்.. மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து சித்தராமையா உள்ளிட்ட பல தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர், தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இந்நிலையில் தேசிய வங்கிகளின் நிர்வாகம் பயிர்கடன் பெற்ற விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மாநில அரசின் சார்பில் வழங்கப்பட்ட நிதி விவசாயிகளின் கடனுக்காக வரவு வைக்கப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த குளறுபடிகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர், மாநில அரசின் சார்பில் சுமார் ஏழரை லட்சம் விவசாயிகள் தேசிய வங்கிகளில் பெற்றிருந்த பயிர்கடனுக்காக, ரூ.3,929 கோடியும், கூட்டுறவு வங்கி கடன் ரூ.480 கோடியும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் தேசிய வங்கி நிர்வாகத்தின் குளறுபடியால் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்ட பணம் வாபஸ் ஆகியுள்ளது. இதற்கும் மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஊடகங்களில் இது குறித்து வெளியான தகவல்கள் தவறானவை
தேசிய வங்கிகளின் நிர்வாகம் மத்திய அரசிடம் தானே உள்ளது. பிரதமா் மோடியின் நிர்வாகம் சிறப்பாக உள்ளதாக புகழ்ந்து தள்ளும் ஊடகங்கள், இவ்விஷயத்தை பேச ஏன் மறுக்கின்றன என வினவியுள்ளார். தேசிய வங்கிகளின் நிர்வாக குளறுபடிகளுக்கு பிரதமர் மோடி தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
நடந்த சம்பவங்கள் குறித்து தேசிய வங்கிகளை தொடர்பு கொண்டு மாநில அரசு சார்பாக விளக்கம் கேட்கப்பட்டது. அவர்களே தங்கள் தரப்பில் நிகழ்ந்த நிர்வாக குளறுபடி தான் இது என ஒப்புக் கொண்டு விட்டனர் என குமராசாமி கூறியுள்ளார்.