4 வயதுக் குழந்தை உள்ளிட்ட 7 பேருக்கு உருமாறிய கொரோனா... கர்நாடகாவில் மையம் கொள்ளும் உருமாறிய கொரோனா
பெங்களூரு: இந்தியாவில் தற்போது வரை உறுதி செய்யப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்பில் பெரும்பாலானவர்கள் கர்நாடக மாநிலத்தில் சேர்ந்தவர்கள்.
பிரிட்டன் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து. அப்போது ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் உருமாறிய கொரோனா வைரசை உறுதி செய்தனர்.
மேலும், இந்தப் புதிய வகை கொரோனா அதிக ஆபத்தானது இல்லை என்றாலும், மற்ற வகைகளைவிட 70% வேகமாகப் பரவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
இந்த உருமாறிய கொரோனா காரணமாக இந்தியா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளுக்கும் பிரிட்டன் உடனான விமானப் போக்குவரத்திற்குத் தடை விதித்தன. இருப்பினும், தடை உத்தரவிற்கு முன்னால் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை சுமார் 33 ஆயிரம் பேர் பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பினர். அவர்களில் யாரெல்லாம் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறியும் ஆய்வுகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்தில் நடைபெற்று வருகிறது.
உருமாறிய கொரோனா
இந்த இடைப்பட்ட காலத்தில் பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களில் 107 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 20 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மையம் கொள்ளும் கர்நாடகா
நாடு முழுவதும் உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் சுமார் 35% கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பெங்களூருவைச் சேர்ந்த மூவருக்கும் சிவமோகா பகுதியில் நான்கு வயதுக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கும் இந்த உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே பிரிட்டன் நாட்டிலிருந்து சமீபத்தில் நாடு திரும்பியவர்கள்.
விமான நிலையத்தைவிட்டு வெளியேறவில்லை
அதேபோல டிசம்பர் 3ஆம் தேதி கர்நாடக மாநிலம் பத்ராவதிக்கு திரும்பிய ஒருவருக்கு டிசம்பர் 23ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளதா என்ற ஆய்வு தற்போது நடைபெறுகிறது. அமெரிக்காவிலிருந்து பிரிட்டன் வழியாக அவர் இந்தியா வந்துள்ளார். இருப்பினும், அவர் பிரிட்டனில் விமான நிலையத்தைத் தாண்டி வெளியே செல்லவில்லை. அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்து ஆறு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.