அசத்தல்.. மாதம் 1 கோடி உற்பத்தி.. பெங்களூரில் வந்தாச்சு கொரோனா பரிசோதனை கருவி தொழிற்சாலை
பெங்களூர்: தெர்மோ ஃபிஷர் சயின்டிஃபிக் என்ற சர்வதேச நிறுவனம் பெங்களூரில் 'கோவிட் -19' பரிசோதனைக் கருவியை தயாரிக்கவுள்ளது.
கோவிபாத் (CoviPath) என்று பெயரிடப்பட்ட இந்த கிட், ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கான கருவியாகும். இந்தியாவில் இந்த வகை சோதனைகள்தான் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஆகியோரால் எம்.டி.ஆர் 2017 விதிகளின் கீழ் கோவிபாத் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான, தெர்மோ ஃபிஷர் சயின்டிஃபிக் நிர்வாக இயக்குனர் அமித் சோப்ரா கூறுகையில், பெங்களூரின் ஒயிட்ஃபீல்டில் தங்களின் புதிய உற்பத்தி பிரிவு துவங்குகிறது, ஒவ்வொரு மாதமும் 1 கோடி பரிசோதனை கிட்களை உருவாக்க முடியும்.
"உலகளாவிய தரத்தை பராமரிக்கும் அதே நேரத்தில் மலிவு விலையில் சோதனை கருவிகளை வழங்க நாங்கள் கருவியாக இருப்போம்" என்று சோப்ரா கூறினார்.
இந்த கருவிகள் இந்தியாவில் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன என்று அந்த நிறுவனம் தெளிவுபடுத்தியது.
இருப்பினும், தடுப்பூசி புழக்கத்திற்கு வந்துள்ள நிலையில், ஒரு புதிய சோதனைக் கருவி தேவையா என்று சோப்ராவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின.
இதற்கு பதிலளித்த அவர், "இந்த சோதனை, கொரோனா அறிகுறி அல்லது அறிகுறியற்ற நபர்களை அடையாளம் காண உதவும். இதனால் ஆரம்பத்திலேயே பரவலைக் கட்டுப்படுத்துகிறது. பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாகத் திறக்கப்படும்போது, வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நிலையான சோதனை யுக்தி ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கும்" என்று அவர் கூறினார்.
கோவிபாத் துல்லியத்தன்மையுடன் செயல்படும் என்று கூறப்படுகிறது. அதாவது இது 99.5% க்கும் அதிகமான துல்லியத்தன்மையோடு இருக்குமாம்.