ஏடிஎம் ''ஓடிபி'' மூலம் பல லட்சம் அபேஸ்.. ஐடி பணியாளர்களுக்கு குறி.. பெங்களூரில் நூதன திருட்டு!
பெங்களூரில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் நடக்கும் நூதன மோசடி காரணமாக பல பேர் ஏமாற்றப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் செய்திகள் வெளியாகி உள்ளது.
பெங்களூர்: பெங்களூரில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் நடக்கும் நூதன மோசடி காரணமாக பல பேர் ஏமாற்றப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் செய்திகள் வெளியாகி உள்ளது.
பொதுவாக ஆன்லைன் வங்கி பண பரிவர்த்தனைகளின் போது வங்கி கணக்கு வைத்திருக்கும் நபரின் போனுக்கு 4 இலக்க ஓடிபி (OTP - One Time Password) அனுப்பப்படும். இந்த நான்கு இலக்க எண்ணை பயன்படுத்தித்தான் நம்முடைய வங்கி பரிவர்த்தனையை நிறைவு செய்ய முடியும்.
பாதுகாப்பு கருதி இந்த முறை பின்பற்றப்படுகிறது. நம்முடைய போனுக்கு மட்டுமே இந்த ஓடிபி வரும் என்பதால், யாரும் நம்முடைய பணத்தை திருட முடியாது. ஆனால் இதை வைத்து தற்போது பெங்களூரில் பெரிய மோசடி ஒன்று நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக எப்படி
காலங்காலமாக நடப்பது போலத்தான் இந்த மோசடி நடந்து இருக்கிறது. அதன்படி வங்கியில் வேலை பார்க்கும் நபர்கள் போல மோசடியாளர்கள் போன் செய்வார்கள். பின் அவர்கள், ''உங்களது கிரெடிட் கார்ட் / டெபிட் கார்ட் காலாவதியாக போகிறது. அதில் சிறிய அப்டேட் செய்ய வேண்டும்'' என்று கூறி கிரெடிட் /டெபிட் கார்ட் எண் மற்றும் சிவிவி எண், பாஸ்வேர்ட்டும் சேர்த்து வாங்கிக் கொள்வார்கள். பெரும்பாலும் இவர்களின் குறி அதிக வயதானவர்கள்தான்.
மொபைல் எண்
அதன்பின் அந்த நபர்களின் மொபைல் எண்ணுக்கு சென்று இருக்கும் ஓடிபி எண்ணை படிக்க சொல்வார்கள். இந்த எண்ணை வைத்து வங்கி பரிவர்த்தனையை முடித்து பணத்தை கொள்ளையடிப்பார்கள். இப்படித்தான் பெங்களூரில் அதிக அளவில் பண மோசடி நடந்து இருக்கிறது. ஆனால் சில மோசடிகள் இது மட்டுமில்லாமல் இன்னும் நூதனமான முறையில் நடக்கிறது.
என்ன நூதனம்
சில சமயங்களில் மக்கள் உஷாராகி ஓடிபி எண்ணை சொல்வதை தவிர்ப்பார்கள். இவர்களுக்காக இப்போது நூதனமான முறையை மோசடியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி வங்கி கணக்கு வைத்திருக்கும் நபர்களின் போனுக்கு இவர்கள் கால் செய்த பின் அந்த எண்ணுக்கு ஒரு மெசேஜ் அனுப்புகிறார்கள். அதில் ஒரு லிங்க் இருக்கும். அந்த லிங்கை கிளிக் செய்தால் கிரெடிட் கார்டை அப்டேட் செய்ய முடியும் என்பார்கள். அதனால் அதில் இருக்கும் லிங்கை கிளிக் செய்ய சொல்கிறார்கள். இந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம், அந்த போனுக்கு சென்று இருக்கும் ஓடிபி எண்ணை அவர்களுக்கே தெரியாமல் ஹேக்கிங் மூலம் திருடி விடுகிறார்கள்.
மோசடி திருட்டு
அதாவது மக்கள் அந்த லிங்கை கிளிக் செய்தவுடன், அந்த போனில் ஏற்கனவே வந்திருக்கும் ஓடிபி எண்ணை மோசடியாளர்கள் திருடிவிடுகிறார்கள். இப்படி இதுவரை பல லட்சம் மோசடி நிகழ்ந்து இருப்பதாக பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர். முக்கியமாக ஐடி ஊழியர்கள் கூட இதனால் ஏமாற்றம் அடைந்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் தகவல்
இதனால் இப்படிப்பட்ட மோசடி நபர்களின் கால்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர். இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் இது தொடர்பாக சிறிய க்ளூ கூட கிடைக்காமல் இருக்கிறார்கள்.