பெங்களூர் ரோடு முழுக்க தடுப்பு.. போலீஸ் குவிப்பு.. பைக், கார்கள் பறிமுதல்.. தீவிரமான இரவு ஊரடங்கு
பெங்களூர்: கொரோனா நோய் பரவல் மிக வேகமாக இருப்பதால், பெங்களூர் நகரில் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. குறிப்பாக இரவு நேரத்தில் கட்டுப்பாடுகள் தீவிரமாக உள்ளன.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக மிக அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ள பெருநகரங்களில் பெங்களூர் ஒன்றாகும்.
பெங்களூர் நகரில் நேற்று ஒரே நாளில் 7, 584 கேஸ் பதிவாகி உள்ளது என்றால் அங்கு நிலவரம் எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
மேம்பாலங்கள் மூடல்
இந்த நிலையில்தான் ஏப்ரல் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, உள்ளது கர்நாடக அரசு. பெங்களூர், மைசூர் உள்ளிட்ட குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இதையடுத்து பெங்களூர் நகரில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மூடப்படுகிறது. அங்கு போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது.
வாகனங்கள் பறிமுதல்
தடுப்புகள் வைத்து அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டுள்ளன. அனாவசியமாக யாராவது வாகனத்தில் வெளியே வந்தால் டூவீலர் அல்லது கார் எதுவாக இருந்தாலும் அது காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. பல நேரங்களில் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். சில நேரங்களில் இது போல பறிமுதல் நடவடிக்கை நடக்கிறது.
கடிதம் தேவை
இரவு நேரத்தில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப வேண்டி இருப்பவர்கள், இரவு பணியில் இருப்பவர்கள் தங்கள் அலுவலகங்களில் இருந்து அனுமதி கடிதம் பெற்றிருக்கவேண்டும். காவல்துறையினர் தடுத்து விசாரிக்கும்போது அந்த அனுமதிக் கடிதம் காட்டினால் மட்டும்தான், இரவு நேரத்தில் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
மால்கள்
மால்களில் உள்ள திரையரங்குகளில் இரவு நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாலை 6.30 மணிக்கு திரைப்பட காட்சிகள் முடிவுக்கு வருகின்றன. அதன்பிறகு திரைப்படங்கள் காண்பிக்கப்பட மாட்டாது. தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டுமே ரசிகர்கள் அமர்ந்து பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெறிச்சோடிய சாலைகள்
வெளியூர்களில் இருந்து பெங்களூர் நகருக்கு வருவோர், இரவு 10 மணிக்கு முன்பாக தங்கள் வீடுகளை சென்று அடைந்து விட வேண்டும் என்பதால் மாலையிலேயே ஊருக்குள் நுழையும் வகையில் பயணத் திட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக இரவு 9 மணிக்கு மேல் படிப்படியாக பெங்களூர் நகர சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.
அவசர சேவைகள்
மருத்துவ சேவை, காவல்துறை உள்ளிட்ட அரசு பணியில் இருப்பவர்கள் , பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அவசர சேவை பிரிவில் இருப்பவர்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் குடும்பத்தோடு பயணிக்க முடியாது. தனி நபர்களாக இருந்தால் மட்டும்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.