யப்ப்பா.. செம கிராண்ட்.. வெள்ளை பூக்கள்.. வைரமோதிரம்.. 30 வகை சாப்பாடு.. நிகிலுக்கு நிச்சயதார்த்தம்
நிகில் குமாரசாமிக்கு கிராண்ட் நிச்சயதார்த்தம் நடைபெற்றது
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரின் மகனும், நடிகருமான நிகில் குமாரசாமியின் நிச்சயதார்த்தம் படு கோலாகலமாக நடந்து முடிந்தது.. வெள்ளை கலர் பூக்களால் மண்டபம் ஜொலி ஜொலிக்க.. வைர மோதிரங்களை மாற்றி.. 30 வகையான சாப்பாட்டுடன் தடபுடலாக நடந்தது!
இப்போதெல்லாம் அரசியல்வாதிகளின் பிள்ளைகள், வாரிசு என்பதையும் தாண்டி.. சினிமா, அரசியல் என ஒரே நேரத்தில் இரட்டை குதிரையில் சவாரி செய்து வருகின்றனர்.
அந்த வகையில், கர்நாடகாவில் நிகில் குமாரசாமியையும், தமிழகத்தில் உதயநிதியையும் குறிப்பிட்டு சொல்லலாம்.. உதயநிதி ஆகட்டும், நிகில் ஆகட்டும்.. இருவருக்குமே நிறைய ஒற்றுமை உள்ளது. இருவரின் தாத்தாக்களுமே (கருணாநிதி, தேவகெளடா) அரசியலில் ஜாம்பவான்களாக இருந்தவர்கள். இவர்களின் அப்பாக்கள் மாபெரும் கட்சியின் தலைவர்கள். இவர்கள் இருவருமே சினிமாவில் ஹீரோக்களாக நடிப்பவர்கள். அதிலும் குறுகிய காலத்தில் ஃபேமஸ் ஆனவர்கள்.
நிர்வாகிகள்
அதேபோல இருவருக்குமே தங்களது கட்சியின் மூத்த நிர்வாகிகளை காட்டிலும் அரசியல் ஞானமும், அனுபவ அறிவும் குறைவே. எனினும் சொந்த செல்வாக்கை வைத்து இளைஞர் அணி பொறுப்பு இவர்களுக்கு அவர்களது அப்பாக்கள் தந்திருக்கிறார்கள். ஒரே நாளில், ஒரே மாதிரியான பதவியை, இந்த வாரிசுகளை பெற்றதை நம்மால் மறக்க முடியாது!
ரேவதி
சினிமா, அரசியலை கலக்கிய நிகில், இப்போது திருமண பந்தத்துக்குள் நுழைய உள்ளார்.. வீட்டில் சுபகாரியமும் நடந்து முடிந்திருக்கிறது.. ரேவதி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது... கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணப்பாவின் பேத்திதான் ரேவதி.. பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த நிச்சயதார்த்ததை வெகு சிறப்பாக நடத்தி உள்ளனர்.
ஜார்ஜ்
எடியூரப்பா, டிகேசிவகுமார், பரமேஸ்வரா, கேஜே ஜார்ஜ், ஐபிஎஸ் அதிகாரி அலோக் குமார், என கர்நாடக அரசியல் முக்கிய புள்ளிகளும், சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். டர்ஃப் கிளப் அருகே தாஜ் வெஸ்ட் என்ட்டில் இந்த நிச்சயதார்த்தம் நடந்தது.. ஆனால் பார்ப்பதற்கு கல்யாணம் போலவே படு கிராண்டாக இருந்தது.. கிட்டத்தட்ட 6000 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதனால் அந்த விடுதி முழுவதுமே வெள்ளை நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வெள்ளை பூக்கள்
இதற்காகவே வெள்ளை பூக்கள் பல்வேறு இடங்களில் இருந்து தருவிக்கப்பட்டதாம். மணமக்கள் பார்க்கவே ஜோராக இருந்தார்கள்.. இருவரும் கோல்டன் & கிரீம் கலரில் டிரஸ் அணிந்திருந்தனர்.. கல்யாண பெண் ரேவதி பீச், கிரீம் கலர் சேலையும், நிகில் ஷர்வானியும் அணிந்திருந்தனர். நிச்சயம் நடக்கும் சமயத்தில் இருவரும் ரோஜா, மல்லிப்பூ மாலைகளை அணிந்திருந்தனர்.. இதையடுத்து மாலைகள் மாற்றி கொண்டனர்.. வைர மோதிரங்களை மாற்றிக் கொண்டனர்.. தாத்தா கவுடாவிடமும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர்.
கல்யாணம்
நிச்சயதார்த்தத்தில் 30 வகையான சாப்பாடுகள் பரிமாறப்பட்டுள்ளன. அதாவது, 9 வகையான குளிர்பானங்கள், 10 வகையான சைட் டிஷ்கள், 14 வகையான சாப்பாடு, 7 வகையான ஸ்வீட்டுகள் என அமர்க்களப்படுத்தி விட்டார்களாம். வரும் ஏப்ரல் மாதம் ராமநகராவில் கல்யாணம் வைத்துள்ளனர். இதற்கு காரணம் குமாரசாமியின் சொந்த தொகுதி ஆகும்.. மனதுக்கு நெருக்கமான தொகுதி.. பிறந்த ஊர் ஹாசன் என்றாலும் ராமநகராதான் அரசியலின் துவக்கப்புள்ளி.
விருந்து
அதனால்தான் இந்த தொகுதியில் திருமணத்தை வைத்து, ராமநகரா, மாண்டியா மக்களை அழைத்து மனசார விருந்து கொடுக்க குமாரசாமி விரும்புகிறாராம். எப்படியோ, ஒரு கல்யாணத்தில் பிரிந்தவர்கள் இன்னொரு கல்யாணத்தில் சேருவார்கள் என்று சொல்வார்கள்.. ஆனால், அரசியலில் பிரிந்த காங்கிரஸ், ஜேடிஎஸ்ஸும் இந்த கல்யாணம் மூலம் நெருங்கிய சொந்தங்களாக மாறியுள்ளது தொகுதி மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.