உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியுடனும் மஜத கூட்டணி சேரப்போவதில்லை.. தேவகவுடா அறிவிப்பு
பெங்களூரு: கர்நாடகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்பு தேர்தலில், எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க போவதில்லை என தேவகவுடா கூறியுள்ளார்.
இந்த கருத்தையே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 14 மாதங்களுக்கு முன் கர்நாடக பேரவை தேர்தரல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுக்கு பின் மஜத - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தன.
இரு மாதங்களுக்கு முன் நடைபெற்ற மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மஜத - காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு இடங்களை மட்டுமே வெற்றி பெற்றன. இந்த வெற்றி என்பது கூட்டணி கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தோல்வியை இரு கட்சிகளும் ஜீரணிக்க முடியாமல் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறி பல காரணங்களை வெளியிட்டனர். இந்நிலையில் கர்நாடகாவில் கூட்டணி அரசு ஆட்சியை இழந்துள்ள நிலையில், இரு கட்சிகளிடையே கூட்டணி தொடருமா அல்லது துண்டிக்கப்படுமா என்பது சந்தேகமாகவே இருந்தது.
இதனிடையே அடுத்த மாதம் குறிப்பிட்ட சில உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் மஜத கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா, இனி நடைபெற உள்ள எந்த தேர்தலிலும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதா வேண்டாமா என்பது பற்றி தீவிர ஆலோசனை நடத்தியே முடிவெடுக்கப்படும்.
பெரும்பாலும் இனி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்ற முடிவையே எடுத்துள்ளோம். தனித்து போட்டியிடுவதையே மஜத தொண்டர்கள் விரும்புகின்றனர் என குறிப்பிட்டார். இதனையடுத்து இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் - மஜத கூட்டணி தொடராது என்பது உறுதியாகியுள்ளது.