சரிந்ததா எடியூரப்பா செல்வாக்கு.. பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் மகனுக்கு இடம் மறுப்பு.. அடுத்து என்ன?
பெங்களூர்: கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற பசவராஜ் பொம்மை புதன்கிழமையான இன்று, 29 அமைச்சர்களை நியமித்து தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார்.
அதேநேரம், பிஎஸ் எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
எடியூரப்பா ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையில் சமநிலையை ஏற்படுத்த பொம்மை முயற்சி செய்துள்ளார் என்பது இந்த அமைச்சரவையை பார்த்தால் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
மகனுக்கு மந்திரி பதவி
புதிய அமைச்சரவையில் கணிசமாக புதிய முகங்கள் உள்ளன, அவர்கள் கட்சி விசுவாசிகள், எந்த கோஷ்டி பிரிவுகளுடனும் தொடர்பில்லாதவர்கள். பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டதால் முதல்வர் பதவியை கடந்த மாதம் 26ம் தேதி எடியூரப்பா ராஜினாமா செய்திருந்தார். இதற்கு மாற்றாக எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜயேந்திராவை அமைச்சரவையில் சேர்க்க கோரிக்கை விடுத்திருந்ததாக கூறப்பட்டது. ஆனால் பொம்மை அமைச்சரவையில் எடியூரப்பா மகனுக்கு இடம் தரவில்லை.
பாஜக தலைமை உறுதி
எடியூரப்பாவை பகைத்துக் கொள்ளாமல், அரசை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக தனது வழிகாட்டியான எடியூரப்பாவின் மகனுக்கு வாய்ப்பு கொடுக்க பொம்மை ஆர்வம் காட்டினார். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது என்று பாஜக மேலிடம் பசவராஜ் பொம்மைக்கு கட்டளையிட்டதாக கூறப்படுகிறது.
செல்வாக்கு இழக்கிறாரா எடியூரப்பா
தனது மகன் அமைச்சரவையில் சேர வேண்டும் என்பதில் எடியூரப்பா உறுதியாக இருந்தார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, இப்போது அவர் கட்சியில் தனது செல்வாக்கை இழந்ததாகவே தெரிகிறது. ஆனால் எடியூரப்பா லேசில் விடக்கூடியவர் இல்லை. கர்நாடக பாஜக தலைவர் பதவியை தனது மகனுக்கு அவர் கண்டிப்பாக கேட்டு லாபி செய்வார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
எடியூரப்பாவுக்கு எதிரான கோஷ்டி
அரவிந்த் பெல்லட், சிபி யோகேஷ்வர் மற்றும் பிஆர் பாட்டீல் யத்னால் ஆகிய மூன்று பேரும், எடியூரப்பாவுக்கு எதிராக வெளிப்படையாக கோஷ்டி பூசலில் ஈடுபட்டுவந்த சீனியர் எம்எல்ஏக்கள் ஆகும். ஆனால் அவர்களுக்கு அமைச்சரவையில் பதவி கிடைக்கவில்லை. இது எடியூரப்பா தரப்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும், அரவிந்த் பெல்லட் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெகதீஷ் ஷெட்டர் அமைச்சராகவில்லை
முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், மூத்த எம்எல்ஏக்களும் மாஜி அமைச்சர்களுமான சுரேஷ் குமார் மற்றும் அரவிந்த் லிம்பாவலி ஆகியோரும் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. பசவராஜ் பொம்மையை விடவும் ஜெகதீஷ் ஷட்டர் வயதில் மூத்தவர். ஏற்கனவே எடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டால் பதவி விலகியபோது, குறுகிய காலம் முதல்வராக பணியாற்றியவர். மேலும் சபாநாயகராக பணியாற்றியவர். எனவே பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் தனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை என்று அவராகவே விலகிக்கொண்டார்.
2 சீனியர் அமைச்சர்கள்
சுரேஷ்குமார் மற்றும் லிம்பாவலி ஆகியோர் மீண்டும் அமைச்சர் பதவி தராததால் அதிருப்தியிலுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சுரேஷ்குமார் பிராமண வகுப்பை சேர்ந்தவர், அரவிந்த் லிம்பாவளி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.
கட்சி தாவியவர்களுக்கு பதவி
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடியூரப்பாவை முதல்வராக்கியதில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சியிலிருந்து தாவி வந்த சில எம்எல்ஏக்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர்கள் இப்போதைய அமைச்சரவையில் தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது. சட்டசபையில் பொம்மைக்கு சிறு அளவுக்கான பெரும்பான்மைதான் இருப்பதால் விலகி வந்தவர்களை பகைத்துக் கொள்ள முடியாது என்பதால் அவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
எடியூரப்பா முடிவு
எடியூரப்பா அரசில் மூன்று துணை முதல்வர்கள் இருந்தனர். பசவராஜ் பொம்மை அரசில் யாரும் துணை முதல்வர்கள் கிடையாது. அந்த வகையில் முழு அதிகாரமும் முதல்வரிடம் தான் இருக்கும். ஏதோ ஒரு வகையில் எடியூரப்பாவை விடவும் பசவராஜ் பொம்மை அதிகாரம் கொண்டவராக இருக்கிறார் அல்லது அப்படி வார்த்து எடுக்கப்படுகிறார் என்றே இந்த கேபினட் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து கட்சியில் புறக்கணிப்பு நிகழ்ந்தால் எடியூரப்பா எந்த மாதிரியான முடிவெடுப்பார் என்று தெரியவில்லை. வருங்காலம்தான் அதைச் சொல்லவேண்டும்.