மே 3-ம் தேதி வரை ஊரடங்கை தளர்த்தப் போவதில்லை.. கர்நாடகம், பஞ்சாப் அரசுகள் அறிவிப்பு
பெங்களூரு: கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்துவதற்காக மே 3-ம் தேதி வரை ஊரடங்கை தளர்த்தப் போவதில்லை என்று கர்நாடகம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் அறிவித்துள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு நாளில் 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 16 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள்.
கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருவதால் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடு அவசியம் என்பதால் மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதியை லாக்டவுன் அறிவித்தது. போக்குவரத்தை ரத்து செய்தது.இந்நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் அன்றாட கூலி வேலை செய்யும் மக்களுக்கு தளர்வு அளிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
யார் யாருக்கெல்லாம் ஊரடங்கை தளர்த்தலாம், எந்தெந்ந தொழில்களை அனுமதிக்கலாம், எப்படி அனுமதிக்கலாம் என்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதை மாநிலங்கள் சூழ்நிலையை ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஐசிஎம்ஆர்.. இந்தியாவில் 80% நோயாளிகளுக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பு
இந்நிலையில் கர்நாடகாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது395 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் 244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இருமாநிலங்களும் மே3ம் தேதி வரை ஊரடங்கை தளர்த்த முடியாது என்று அறிவித்துள்ளன. மே 3ம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவித்துள்ளன.
முன்னதாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அம்மாநிலத்தில் மே 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக நேற்று அறிவித்தார். இதன் மூலம் நாட்டிலேயே கொரோனா ஊரடங்கை மூன்றாவது முறையாக நீட்டித்த மாநிலமாக தெலுங்கானா உள்ளது. தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வேகமாக பரவும் மாநிலங்களில் ஒன்றாக தெலுங்கானா உள்ளது.