அப்பாடா.. கட்டுப்பாட்டை நீக்கிய கர்நாடகா! தமிழகத்திலிருந்து பெங்களூர் நோக்கி அணி வகுக்கும் வாகனங்கள்
பெங்களூர்: கர்நாடகாவிற்கு, வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, கர்நாடகாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக, தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் இருந்து வருவோர் வேறுவிதமாகவும், பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் வேறுவிதமாகவும் பார்க்கப்பட்டனர்.
ஒரு கட்டத்தில் தமிழகத்தில் இருந்து வருவோருக்கு, 14 நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டது. பிறகு 7 நாட்களாக குறைக்கப்பட்டது. பிறகு, 3 நாட்களாக குறைக்கப்பட்டது.
"கடைசி மூச்சு வரை.. உயிர் இருக்கும்வரை.. நான் பெருமைமிக்க கன்னடன்.." அதிர வைத்த அண்ணாமலை பேச்சு
தனிமைப்படுத்துதல்
இதன் அர்த்தம் என்னவென்றால், சென்னையில் இருந்து ஒருவர் பெங்களூர் நகரத்திற்கு வருகிறார் என்றால், அவர் கர்நாடக அரசு கூறக்கூடிய ஒரு விடுதியில் சென்று தங்க வேண்டும். அதன்பிறகு, வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். விடுதியில் சுத்தம், சுகாதாரம் எப்படி இருக்கும், பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதெல்லாம், மிகப்பெரிய கேள்வி. அதோடு இதற்கான செலவையும், சம்பந்தப்பட்ட நபரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதால், பணி நிமித்தமாக கூட பெங்களூர் வருவதற்கு தமிழர்கள் தயங்கினர்.
கெடுபிடிகள்
சேவா சிந்து என்ற வெப்சைட் ஒன்று கர்நாடக அரசால் செயல்படுத்தப்படுகிறது. அந்த வெப்சைட்டில் தங்களைப்பற்றி பதிவு செய்துவிட்டு என்றைக்கு ஸ்லாட் கிடைக்கிறதோ, அன்றைக்குத்தான் கர்நாடகா வரமுடியும் என்ற விதிமுறையும் இருந்தது. இங்கு வருவோருக்கு கைகளில் சீல் அடிக்கப்படும் நடைமுறையும் இருந்தது. ஒருவேளை வெப்சைட்டில் பதிவு செய்யாமல் வந்தால், ஓசூர், பெங்களூர் எல்லைப் பகுதியில் வைத்து அதிகாரிகள் அவர்களை வந்த வழியாக திருப்பி அனுப்பிவிடுவார்கள். மன கஷ்டத்துடன் அவர்கள் திரும்பிச் செல்லவேண்டிய நிலைமை இருந்தது. இதை பயன்படுத்திக் கொண்டு சில இடைத்தரகர்கள் திரும்பி செல்வோரை அணுகி 3,000 ரூபாய் வரை லஞ்சமாக பெற்றுக்கொண்டு காட்டுவழிப் பாதை வழியாக ரகசியமாக அழைத்து கொண்டு பெங்களூரில் விட்டதும் நடந்தது.
கட்டுப்பாடு நீக்கம்
இந்த நிலையில்தான், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, சமீபத்தில் அனைத்து மாநில தலைமைச் செயலாளருக்கும், எழுதிய கடிதத்தில், தனிநபர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு எந்த விதமான தடைகளையும் மாநில அரசுகள் விதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். இந்த நிலையில்தான் கர்நாடக அரசு நேற்று இரவு தனது அத்தனை கட்டுப்பாடுகளையும் நீக்கி விட்டது.
வாகன நடமாட்டம் அதிகரிப்பு
இனிமேல் பதிவு செய்துவிட்டுதான் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு வரவேண்டும் என்பது கிடையாது. தனிமைப்படுத்துதல் என்ற பேச்சுக்கும் இடமில்லை. மக்கள் விழிப்புணர்வோடு நடந்து கொண்டால் சரிதான் என்று கூறி விட்டது கர்நாடக அரசு. இதையடுத்து இத்தனை மாதங்களாக பணி நிமித்தம் அல்லது தங்கள் குடும்பத்தினரை பார்ப்பதற்கு கூட பெங்களூர் வரமுடியாத தமிழகத்தை சேர்ந்த பலரும் வாகனங்களில் சாரை சாரையாக அணிவகுக்க ஆரம்பித்துள்ளனர்.
Recommended Video
கர்நாடகா எல்லை
எனவே, ஓசூர் மற்றும் பெங்களூரு இடையேயான அத்திப்பள்ளி எல்லையில் உள்ள சோதனை சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதை பார்க்கமுடிந்தது. எந்தவித கட்டுப்பாடும் இன்றி அவர்கள் மாநிலங்களுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கிருந்து அவர்கள் தமிழகத்தின் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல வேண்டும் என்றாலும் பாஸ் எளிதாக கிடைத்து விடுவதாக கூறுகிறார்கள். எனவே தமிழகம் மற்றும் கர்நாடகா இடையேயான வாகன போக்கு வரத்து அதிகரித்துள்ளது. பல்வேறு டோல்கேட்களில், வாகன எண்ணிக்கை அதிகமாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. இருப்பினும், மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் சமூக இடைவெளி விட்டு பழகுவது, முக கவசம் அணிவது போன்றவற்றின் மூலமாக, தொற்று பரவாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்.