கலாச்சார கமிட்டி.. கர்நாடகாவிலும் கலக குரல்.. தென்னிந்தியர் புறக்கணிப்பு.. குமாரசாமி கொந்தளிப்பு
பெங்களூரு: நாட்டில் 12000 ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரத்தை கண்டறிவதற்கு 16 பேர் கொண்ட கமிட்டியை மத்திய அரசு நியமித்துள்ளது. அந்தக் கமிட்டியில் கன்னடர் அல்லது வேறு எந்த தென்னிந்திய மொழிகளில் ஒருவர் கூட இடம் பெறவில்லை. பெண் உறுப்பினரும் ஒருவர் கூட இல்லை என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய கலாச்சார அமைச்சகம் 12000 ஆண்டுகளுக்கும் முந்தைய நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை கண்டறிவதற்கு என்று 16 பேர் கமிட்டியை நியமனம் செய்துள்ளது. நாட்டின் துவக்க காலத்தில் இருந்த பண்பாடு மற்றும் இதன் பரிணாம வளர்ச்சியை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு இந்தக் கமிட்டி ஆய்வு செய்யும்.
சிவகங்கை முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரன் நுரையீரல் தொற்றால் மரணம்
ஆட்சேபம்
இந்தக் கமிட்டிக்கு ஆட்சேபம் தெரிவித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமி தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், ''இந்தக் கமிட்டியில் ஒருவர் கூட கன்னடர் இல்லை. திராவிட பண்பாடு தெரிந்த தென்னிந்தியர்களும் ஒருவர் கூட இந்தக் கமிட்டியில் இடம் பெறவில்லை.
ஒருதலைப்பட்சம்
கன்னடிகர் ஒருவர் கூட இல்லாமல் நடத்தப்படும் இந்த ஆய்வு ஒருதலைப்பட்சமானதாக இருக்கும். தென்னிந்தியர்களை ஒதுக்கி வைத்து, ஒட்டுமொத்த நாட்டின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் படிப்பது குறித்து நாம் எவ்வாறு சிந்திக்க முடியும்?
பெண் இல்லை
நமது நாட்டை நம் தாயுடனும் புனிதமான பசுவுடனும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் நாம். ஒரு பெண் கூட கமிட்டியில் இடம் பெறாமல் எவ்வாறு இந்தக் கமிட்டி ஆய்வு மேற்கொள்ளும்.
மறுசீரமைப்பு
ஆய்வின் குறிக்கோள் குறித்து தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் இந்தக் கமிட்டி முழுக்க முழுக்க கலாச்சாரம், வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றில் பாரபட்சம் கொண்டதாக இருக்கிறது. இந்தக் கமிட்டியில் வடஇந்தியர்கள் தான் அதிகம் இடம் பெற்றுள்ளனர். ஆய்வுக் குழுவை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
திராவிட கலாச்சாரம்
இவரது ட்வீட்டுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து பதிவு செய்துள்ளனர். நாட்டிலேயே மிகவும் பழமையானது திராவிட கலாச்சாரம். பாரபட்சமாக இந்தக் கமிட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க வேண்டும். இந்தக் கமிட்டியை ஏற்றுக் கொள்ளக் கூடாது. தென்னிந்தியர்களுக்கான எச்சரிக்கை மணி இது என்று பலரும் பதிவிட்டுள்ளனர்.
உறுப்பினர்கள்
16 உறுப்பினர்களைக் கொண்ட கலாச்சார நிபுணர்குழுவினை மத்திய அரசு அமைத்துள்ளதாக மத்திய கலாச்சார - சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்தியத் தொல்பொருள் துறைத் தலைவர் கே.என்.தீட்சித், டாக்டர் ஆர்.எல்.பிஷ்த், டாக்டர் பி.ஆர்.மணி, பேராசிரியர் சந்தோஷ் சுக்லா, டாக்டர் ரமேஷ்குமார் பாண்டே, பேராசிரியர் மக்கன்லால், டாக்டர் ஜி.என்.ஸ்ரீவத்ஷவ, நீதிபதி முகுந்த்காந்த் சர்மா, பேராசிரியர் பி.என்.சாஸ்திரி, பேராசிரியர் ஆர்.சி.சர்மா, பேராசிரியர் கே.கே.மிஸ்ரா, டாக்டர் பல்ராம்சுக்லா, பேராசிரியர் ஆஷாத் கௌசிக், பண்டிட் எம்.ஆர்.சர்மா, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், தொல்பொருள் ஆய்வுத் துறை ஆகியவைகளின் இரண்டு பிரதிநிதிகள் ஆகியோர்களை இக்குழுவின் உறுப்பினர்களாகவும் நடுவண் அரசு அறிவித்துள்ளது.