குமாரசாமி ஆட்சிய நாங்க ஏன் கவிழ்க்கணும்.? அதுவா கவிழும் பாருங்க.. சொல்வது கர்நாடக பாஜக
பெங்களூரு: கர்நாடகத்தில் மக்கள் செல்வாக்கை இழந்து விட்ட குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு, அரசியல் சுயநலத்தால் தானாகவே கவிழும் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 இடங்களில் பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது. காங்., - மஜத கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றதால் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் குமாரசாமி கூட்டணி அரசுக்கு எதிராக வந்துள்ளதால், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிர்க் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் கர்நாடக முதல்வர் குமாரசாமியும், கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான சித்தராமையாவும் சந்தித்து பேசி தங்களது கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ள அபாயங்கள் குறித்து ஆலோசித்தனர். எம்எல்ஏக்களை விலை பேசும் பாஜகவின் குதிரை பேரத்தை தடுப்பது குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
மேலும் மஜத - காங்கிரஸ் இடையிலான பிரச்சனைகளுக்கு இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. கூட்டணி அரசுக்கு எதிராக இரு கட்சி உறுப்பினர்களும் சர்ச்சை ஏற்படும் வகையில் பேச கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
குஜராத் டியூஷன் சென்டரில் பயங்கர தீ விபத்து.. பலியான மாணவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு!
இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில பாஜக செய்திதொடர்பாளர் பிரகாஷ், குமாரசாமி அரசை கவிழ்க்க யாரும் முயற்சிக்கவில்லை என்றார்.
காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் மக்களிடையே செல்வாக்கை இழந்துவிட்டன. இதற்கு உதாரணமாக குமாரசாமியின் மகனே மண்டியா தொகுதியில் படுதோல்வி அடைந்திருப்பதை பாருங்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் செல்வாக்கு துளியும் இல்லாத குமாரசாமி அரசு, சுயநல அரசியல் காரணங்களுக்காக தானாகவே விரைவில் கவிழ்ந்துவிடும் என குறிப்பிட்டார்