எதிர்க்கட்சிகளை பழி வாங்க மாட்டேன்..விவசாயிகளுக்கு உதவித்தொகை.. சட்டசபையில் எடியூரப்பா அதிரடி
பெங்களூர்: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்த முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சிகளை பழிவாங்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
சித்தராமையா, குமாரசாமி ஆட்சியில் எதிர்க்கட்சிகளை பழி வாங்கவில்லை. நானும் துவேச அரசியலை முன்னெடுக்க மாட்டேன்.
மறப்போம், மன்னிப்போம் என்ற கொள்கையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. வாக்காளர்கள், பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரின் ஆதரவால் முதல்வராகியுள்ளேன்.
கர்நாடகாவில், 80க்கும் மேற்பட்ட தாலுகாக்களில் மழையின்றி வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சியை நாம் அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டியுள்ளது. விவசாயிகளின் கஷ்டத்தை புரிந்து கொண்டு சித்தராமையா, குமாரசாமி ஆகிய எதிர்க் கட்சித் தலைவர்கள் எனக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
ஈழத் தமிழர் பகுதிகளில் அடுத்தடுத்து விபத்துகள் - 8 ராணுவத்தினர் பலி- இலங்கை அரசு ஷாக்!
பிரதமர் நரேந்திர மோடியை போலவே நானும் மாநிலத்தில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 2000 ரூபாயை இரு தவணைகளில் வழங்க முடிவு செய்துள்ளேன்.
விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் கடன்களை மொத்தமாக தள்ளுபடி செய்ய திட்டமிட்டுள்ளேன். வாக்காளர்கள் நமது எஜமானர்கள். அவர்களுக்கு சேவை ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் தேவை என்று கோரிக்கை விடுக்கிறேன்.
அனைவரும் நான் தாக்கல் செய்துள்ள நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் பெயரை உச்சரித்து தனது பேச்சை எடியூரப்பா ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.