சிக்னல்களை ஆப் செய்தது யார்? உள்துறை அமைச்சருக்கே தெரியவில்லை.. விளாசிய சபாநாயகர்
பெங்களூர்: அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்து பெங்களூர் வந்த போது, முதல்வருக்கு இணையாக சிக்னல்கள் இல்லாத போக்குவரத்தை ஏற்படுத்தி கொடுத்த பிரச்சனையில், உள்துறை அமைச்சரை கர்நாடகா சபாநாயகர் கடுமையாக கண்டித்தார்.
காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை, உடனடியாக சபாநாயகர் ஏற்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சபாநாயகரை நேரடியாக சந்தித்து ராஜினாமா கடிதங்களை அளிக்குமாறு உத்தரவிட்டது.
இதன் பெயரில் மும்பையில் இருந்து சிறப்பு விமானத்தில் பெங்களூர் வந்து அங்கிருந்து தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு, சிக்னல்கள் அற்ற போக்குவரத்தை ஏற்பாடு செய்து இருந்ததாக சர்ச்சை எழுந்தது.
பிரியாணிய விடுங்க.. மீன், நாட்டுக் கோழி சாப்பிடுங்க.. குமாரசாமிக்கு சபாநாயகர் கொடுத்த செம டிப்ஸ்
|
ஆளும் கட்சியிலேயே அதிருப்தி
அதிருப்தி எம்எல்ஏக்கள் வந்த பஸ்சுக்கு முதல்வருக்கு ஈடாக இப்படி ஒரு வசதி செய்து கொடுத்தது தொடர்பாக சட்டசபையில் இன்று காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஏ.டி.ராமசாமி கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக பதிலளித்த உள்துறை அமைச்சர் எம்பி பாட்டில், அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது எனவேதான் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததே தவிர, சிக்னல்கள் அற்ற போக்குவரத்தை ஏற்படுத்தித்தரவில்லை என்று பதிலளித்தார்.
சிக்னல்கள் ஆப்
இதனால், கோபமடைந்த சபாநாயகர் ரமேஷ்குமார், சிக்னல் அற்ற சாலைகளில்தான் அவர்கள் பயணித்தனர். அனைத்து சிக்னல்களையும் ஆப் செய்து வைக்கப்பட்டு இருந்தன என்பதை ஊடகங்கள் வாயிலாக இந்த உலகமே பார்த்து விட்டது. உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். அவர்களுக்கு சிக்னல் அருகே போக்குவரத்தை ஏற்படுத்தியிருந்தது உண்மைதானே.
சபாநாயகர் காட்டம்
இந்த நாட்டுக்காக உழைப்பவர்கள், மக்களுக்காக உழைப்பவர்கள், இவர்களையெல்லாம் நீங்கள் கண்டு கொள்வதில்லை. இதுபோன்ற நபர்களுக்கு நீங்கள் சிக்னல்கள் அற்ற போக்குவரத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளீர்கள். இதே நிலை நீடித்தால் நாளைக்கு குற்றவாளிகளுக்கும் கூட சிக்னல் இல்லாத போக்குவரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நடைமுறை ஆரம்பித்து விடும், என்று சாடினார்.
ஆலோசனை
இதனிடையே அமைச்சர் பொய் தகவலை சட்டசபையில் கூறியதாக குற்றம்சாட்டி ஆளும் கட்சி உறுப்பினரான ராமசாமி வெளிநடப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். சபாநாயகரின் கோபத்தையடுத்து, கர்நாடக டிஜிபி, பெங்களூர் போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் எம்பி பாட்டில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று இரவு ஆலோசனை நடத்தினார்.
சிக்னலை ஆப் செய்தது யார்
நடைபெற்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது டிராபிக் சிக்னல் அற்ற போக்குவரத்தை அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தது உள்துறை அமைச்சருக்கே, தெரியாது என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படியானால் அவர்கள் விரைவாக வந்து ராஜினாமா கடிதங்களை கொடுக்க, இவ்வாறு ஒரு உதவியை செய்தது யார் என்ற கேள்வியும் எழுகிறது.