தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம்.. பக்கத்து கர்நாடகாவில் மழை, வெள்ளத்தால் மக்கள் அவதி!
பெங்களூர்: தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில், பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் மழை, வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தின் உட்பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடந்த இரு தினங்களில், வடக்கு கர்நாடகாவில் மிதமான மற்றும் பலத்த மழை பெய்தது. விஜயபுரா, பாகல்கோட், தார்வாட், பெலகாவி, உத்தரா கன்னடா மற்றும் கதக் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது.
ஹுப்பள்ளியில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கன மழை பெய்தது. நீலிகின் சாலை, காமரிபேட் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரத்தின் தாழ்வான பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
இதேபோல், பெலகாவி, கதக், பாகல்கோட் மற்றும் உத்தர கன்னட மாவட்டங்களிலும் பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. பெலகாவி மாவட்டத்தில் உள்ள அர்பவியில் 100 மி.மீ க்கும் அதிகமான மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட வடக்கு கர்நாடகாவில் மழை பெய்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் 175 தாலுகாக்களில் 156 வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு, ஏற்கனவே அறிவித்திருந்தது. மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களின் பெரும்பாலான தாலுகாக்கள்தான் இந்த பட்டியலில் இடம் பிடித்திருந்தன.
"வடக்கு கர்நாடகாவின் பல பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) மழை தொடரும் என்று எதிர்பார்க்கிறோம், ஆனால் குறைந்த தீவிரத்துடன் இருக்கலாம். நாளை முதல் மழைப்பொழிவு குறையும் "என்று கர்நாடக மாநில இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையத்தின் இயக்குனர் சீனிவாஸ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான மாவட்டங்களில், விதைப்பு பணி இன்னும் வேகம் அடையவில்லை. மழையை எதிர்பார்த்து விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களைத் தயார் நிலையில் வைத்திருந்தாலும், இன்னும் தேவையான அளவுக்கு ஈரப்பதம் கிடைக்கவில்லை.
ஆண்டுக்கு சராசரியாக 1,500 மி.மீ மழை பெய்யும் பெலகாவி மாவட்டத்தில், மழைக்காலத்திற்கு முந்தைய காலத்தின் சராசரி மழையளவு (106 மி.மீ) இம்முறை கிடைக்கவில்லை. அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இதுவரை வெறும் 31 மி.மீ மழை பெய்துள்ளது.
விஜயபுரா மாவட்டத்தில் வருடாந்திர மழையளவு 657 மி.மீ. ஜூன் மாதத்திற்குள், இம்மாவட்டத்தில் 95 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும், ஆனால் இந்த ஆண்டு வெறும் 54 மி.மீ மழை பெய்துள்ளது.
ஜூன் மாதத்தில் சராசரியாக 114 மி.மீ மழை பெய்யும் தார்வாட் மாவட்டத்தில் இதுவரை வெறும் 24 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. இதுபோன்று, எனவே இப்போது கன மழை பெய்தாலும், இதுவே போதவில்லை என்பதுதான் கள நிலவரம். இந்த மழை இப்படியே தொடர்ந்தால் பஞ்சம் தீரும் வாய்ப்புள்ளது.
அதேநேரம், காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் உள்ளடங்கிய தெற்கு கர்நாடகாவில் இன்னும் பருவமழை ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.