நூலிழை மெஜாரிட்டியுடன் எடியூரப்பா..... விடிவதற்குள் வஞ்சம் தீர்க்குமா ஜேடிஎஸ்-காங்?
Recommended Video
பெங்களூரு: கர்நாடகாவில் நூலிழை மெஜாரிட்டியில்தான் முதல்வர் எடியூரப்பா நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார். தங்களது அரசை கவிழ்த்த பாஜகவுக்கு ஜேடிஎஸ்- காங்கிரஸ் பதிலடி தருமா? என்கிற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குமாரசாமி தலைமையிலான ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசின் எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்தது பாஜக. அவர்களை மும்பைக்கு கடத்திச் சென்று ஹோட்டலில் சிறை வைத்தது.
இதனால் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் பங்கேற்கவில்லை. இதையடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. 105 எம்.எல்.ஏக்களை கொண்டிருக்கும் பாஜகவின் எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு
இதை ஏற்று ஆளுநர் வஜூபாய் வாலாவும் எடியூரப்பாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் எடியூரப்பா சட்டசபையில் நாளை பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறியுள்ளார்.
சபாநாயகர் அதிரடி
இந்நிலையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத 14 அதிருப்தி எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். கர்நாடகா சட்டசபையில் மொத்தம் 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
1 எம்.எல்.ஏ ஆதரவு கூடுதல்
இதனால் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 207 ஆனது. பெரும்பான்மைக்கு தேவை 104. பாஜகவிடம் 105 எம்.எல்.ஏக்கள் உள்ளதால் நூலிழை மெஜாரிட்டியில் இருக்கிறார் எடியூரப்பா.
வியூகத்தில் ஜேடிஎஸ்-காங்.
இதனிடையே தங்களது அரசை கவிழ்த்த பாஜகவுக்கு பதிலடி தர ஜேடிஎஸ்-காங்கிரஸ், பாஜக எம்.எல்.ஏக்கள் ஒன்றிரண்டு பேரை வாக்கெடுப்பில் பங்கேற்கவிடாமல் தடுக்க செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடகா அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நீடிக்கிறது.