இந்திய அறிவியல் கழகத்தில் திடீர் வெடிவிபத்து… ஒருவர் பலி.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழக சோதனைக் கூடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஆய்வாளர் மனோஜ் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பதை கண்டறிய முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். மேலும் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆய்வக சோதனைக் கூடத்தில் சோதனை முயற்சிகள் நடைபெற்று கொண்டிருந்த போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. விபத்தின் போது, சூப்பர்வேவ் டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனத்தை சேர்ந்த 4 ஆய்வாளர்களும் அப்போது இருந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
சோதனையின் போது, உள்ளே இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. வெடிப்பு ஏற்பட்டவுடன் மனோஜ்குமார் சுவரில் தூக்கி அடிக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். அவருடன் இருந்த அதுல்யா, கார்த்திக், நரேஷ் குமார் ஆகியோர் படுகாயத்துடன் ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது, நெருப்பு, எரிவாயு என்று எதுவும் இல்லாமல் ஏற்பட்ட ஷாக்வேவ் வெடி விபத்தாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தை ஆய்வு செய்த இந்திய அறிவியல் கழக அதிகாரிகள், வெடிவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது பற்றி தங்களால் உறுதியாக எதுவும் கூற முடியவில்லை என்று தெரிவித்தனர்.
சோதனைக்கூடத்தில் அனைத்தும் தூக்கி வீசப்பட்டு சிதறிக் கிடந்துள்ளன. ஆனால் நெருப்பு, எரிவாயு சாயல் எதுவும் இல்லை. இருப்பினும், வெளியான ஆற்றலே ஒருவரை அந்த இடத்திலேயே கொல்ல போதுமானது என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆய்வக பணியின் போது, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்ததாக அறிவியல் கழகத்தினர் உறுதிபட தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து சதாசிவ நகர் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.