காங்.பிடியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ. திடீர் எஸ்கேப்.... விடிய விடிய தேடுதல் வேட்டை!
Recommended Video
பெங்களூரு: காங்கிரஸ் கட்டுப்பாட்டு ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ. ஶ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல் திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரை நேற்று இரவு முதல் விடிய விடிய காங்கிரஸார் தேடினர்.
கர்நாடகா சட்டசபையில் இன்னும் சில மணிநேரங்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் முதல்வர் குமாரசாமி அரசு. அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தும் கடைசி கட்ட முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ராஜினாமா செய்த ராமலிங்கா ரெட்டி உள்ளிட்ட சிலர் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்புகின்றனர். அதேபோல் ஜேடிஎஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் முதல்வர் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா மன்னிப்பு கோரியிருக்கிறார்.
இதனால் குமாரசாமி அரசு தப்புவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என கூறப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் வசம் இருந்த ரிசார்ட்டில் இருந்ந்து ஶ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல் எம்.எல்.ஏ திடீரென மாயமாகி உள்ளார்.
இந்த ரிசார்ட்டில் நேற்று இரவு முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியிருந்தனர். அப்போது முதல் பாட்டீல் எம்.எல்.ஏ.வை காணவில்லை என கூறப்படுகிறது. அவர் எங்கே இருக்கிறார் என காங்கிரஸ் நிர்வாகிகள் விடிய விடிய தேடினர். இதனால் கர்நாடகாவில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.