கர்நாடக களேபரம்.. ஆபரேஷன் தாமரை பெயிலு.. ஆனாலும் உயிரோடு இருக்கும் பேஷன்ட்!
Recommended Video
பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக நடத்திய ஆபரேஷன் தாமரை மீண்டும் தோல்வியை தழுவியது. இதனால் பாஜக மூன்றாவது முறையாக மூக்கறுபட்டாலும் மீண்டும் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிகளை அது விடாது என்றே சொல்லப்படுகிறது.
இன்னும் ஒருசில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தென்னிந்தியாவில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக குறிப்பிடத்தக்க அளவில் வாக்கு வங்கி வைத்துள்ளது. அதனால் என்ன விலை கொடுத்தேனும் அங்கு ஆட்சியில் அமர்ந்து விட பாஜக துடியாய் துடிக்கிறது. கடந்த மே மாதம் இங்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது இதில் பாஜ 104இடங்களிலும் , காங்கிரஸ் 79 இடங்களிலும், மஜத 37 இடங்களிலும் மற்றும் சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
இதில் ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத சூழலில் தனிப்பெரும் கட்சியாக தாங்கள் வெற்றி பெற்றதால் ஆட்சியமைக்க உரிமை கோரினர். ஆளுநரும் அவர்களை அழைத்ததால் காங்கிரஸ் மத சார்பற்ற கட்சிகளின் கூட்டணி காத்திருக்க நேரிட்டது. எம் எல் ஏக்கள் குதிரை பேரம் நடைபெற வசதியாக ஆளுநரும் பெரும்பான்மையை நிரூபிக்க பல நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார். ஆனால் உச்ச நீதிமன்ற தலையீட்டினால் 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எடியூரப்பாவுக்கு ஏற்பட்டது. இதனால் வாக்கெடுப்பு நடத்தாமலேயே எடியூரப்பா விலகிக்கொண்டார். அது முதல் எப்படியேனும் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பாஜக பெருமுயற்சி மேற்கொண்டு வருகிறது.
கனவு நிறைவேறவில்லை
காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதாதளமும் ஆட்சியமைத்தப் பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் கிடைக்காதவர்களை வைத்து பாஜக தனது ஆட்டத்தை தொடங்கியது. சில எம் எல் ஏக்களை இழுத்து தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வைப்பதன் மூலம் ஆட்சி அமைக்கலாம் என்று எண்ணியது ஆனால் , குமாரசாமியும், சித்தராமையாவும், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவகுமாரும் பாஜகவோடு நடத்திய ஆடுபுலி ஆட்டத்தில் பாஜகவால் வெல்ல முடியவில்லை.
2வது முயற்சி
கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் இதே போன்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. அப்போதும் சந்தர்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாஜக மீண்டும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு குடைச்சல் கொடுத்தது. இதிலும் முதலமைச்சர் குமாரசாமியும், முன்னாள் முதலைமைச்சர் சித்தராமையாவும் இந்த முயற்சியையும் வெற்றிகரமாக முறியடித்தனர். பதவி கிடைக்காத அதிருப்தியாளர்கள் பதவி கொடுத்து சரிகட்டப்பட்டனர். சிலரது பதவி பறிக்கவும் பட்டது.
3வது முயற்சி
கடந்த முறை செய்யப்பட அமைச்சரவை மாற்றத்தில் காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் ஜார்கிஹோளி, சுயேச்சை எம் எல் ஏ சங்கர் ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டது. பெல்லாரி தொகுதி எம்.எல்.ஏ-வான துக்காராமுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் சுயேச்சை எம் எல் ஏக்கள் சங்கரும் நாகேசும் அரசுக்கான ஆதரவை விலக்கி கொள்வதாக கூறி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். அதோடு துக்காராமுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதால் இன்னொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான நாகேந்திராவும் பிற காங்கிரஸ் எம் எல் ஏ க்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதை சாதகமாக்கிய பாஜக அதி தீவிரமாக களமிறங்கியது. ஆபரேஷன் தாமரை மூலம் 2 சுயேச்சைகள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 பேரையும் இழுத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டது. அதிருப்தியில் இருக்கும் எம் எல் ஏக்களுக்கு 50 கோடிகள் வரை கொடுப்பதற்கும் முன் வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
களம் இறங்கிய காங்கிரஸ்
இதையடுத்து களமிறங்கிய காங்கிரஸ் தலைவர்கள் தங்களது எம் எல் ஏக்களுக்கு கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலம் உங்கள் பதவிகள் பறிக்கப்படும் என்று கூறியது, சுயேச்சை எம் எல் ஏக்களின் கோரிக்கைகள் கவனிக்கப்படும் என்று குமாரசாமி தரப்பில் வாக்குறுதியும் கொடுக்கப்பட்டது. ராகுலும் மாநிலத் தலைவர்களிடம் பேசி அவர்களை சமாதானம் செய்யக் கூறினார். இதனையடுத்து எம் எல் ஏக்கள் சமாதானமாகி மும்பையில் இருந்து கர்நாடகவுக்கு திரும்பியுள்ளனர். இருந்தாலும் ரமேஷ் ஜார்கிஹோளி, நாகேந்திரா, உமேஷ் ஜாதவ், மஹேஷ்கமடஹள்ளி ஆகிய 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எந்த முடிவும் எடுக்க முடியாமல் மதில்மேல் பூனையாக உள்ளனர்.
ஆசை காட்டும் எடியூரப்பா
இப்போதைக்கு காங்கிரஸ் மத சார்பற்ற அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியுள்ளது. இந்நிலையில் பேட்டியளித்துள்ள எடியூரப்பா ஆட்சியை கவிழ்க்க பாஜக எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளாது என்று கூறியிருக்கிறார். ஆனால் முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி யும் அவரது ஆதரவு எம் எல் ஏக்கள் 11 பேரிடமும் எடியூரப்பாவும், பாஜகவும் தொடர்ந்து தொடர்பிலேயே உள்ளனர். முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி க்கு பாஜகவுக்கு வந்தால் பெரிய எதிர்காலம் உண்டு என்ற ஆசை வார்த்தைகள் கூறப்பட்டுள்ளது. அவரும் பாஜகவில் தன்னை மிகபெரிய சக்தியாக உருமாற்றி கொள்ள இது நல்ல சந்தர்ப்பம் என்றே கருதுகிறார் ஆகவே இப்போதைக்கு ஆபரேஷன் பெயில் என்றாலும் பேஷன்ட் உயிரோடுதான் உள்ளார், ஆகவே எந்நேரம் வேண்டும் என்றாலும் பாஜக மீண்டும் இந்த ஆபரேஷனை நடத்த தயங்காது.