பிற மாநிலங்களில் இருந்து பெங்களூர் வரனுமா.. தனிமைப்படுத்துதல் விதிமுறையை மாற்றியது கர்நாடக அரசு
பெங்களூர்: தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து பெங்களூர் உட்பட கர்நாடகா பகுதிகளுக்கு பயணம் செய்து வரக்கூடியவர்களுக்கான ஒரு முக்கியமான விதிமுறை மாற்றம் இன்று அந்த மாநில அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் சமீபகாலமாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.
ஜூன் மாதம் 29ம் தேதி கர்நாடக அரசு எடுத்த ஒரு விதிமுறையின்படி, தமிழகத்தில் இருந்து பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு வருவோருக்கு சலுகை வழங்கப்பட்டது.
பெங்களூரை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்.. முழு ஊரடங்கு வராது.. போகாதீங்க.. அரசு அழைப்பு
14 நாட்கள் தனிமை
மகாராஷ்டிரா மாநிலம் தவிர்த்து பிற எந்த ஒரு மாநிலத்தில் இருந்தும், கர்நாடகா வருகை தருவோர், 14 நாட்கள் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று கர்நாடக அரசு தனது விதிமுறைகளில் மாற்றம் செய்து இருந்தது. அதற்கு முன்புவரை, தமிழ்நாடு மற்றும் டெல்லியில் இருந்து வருவோருக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வருவதைப் போலவே, நிறுவன தனிமைப்படுத்துதல் (Institutional quarantine)
என்பது கட்டாயமாக இருந்தது.
வீட்டு தனிமைப்படுத்துதல்
இந்த நிலையில், கர்நாடக அரசு இன்று தனது விதிமுறையை மேலும் தளர்வு செய்துள்ளது. இதன்படி, மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருந்தால் போதும். நிறுவன தனிமைப்படுத்துதல் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் இருப்போர் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிகரிப்பு
அரசின் இந்த முடிவுக்கு காரணம் இருக்கிறது. நிறுவனத்தனிமைப்படுத்துதலுக்கு போதிய இடவசதி இல்லை என்பதுதான் அந்த காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில், கர்நாடகாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், நோயாளிகளுக்கான படுக்கை வசதி என்பது மருத்துவமனைகளில் வெகுவாக குறைந்து கொண்டிருக்கிறது.
கெடுபிடி
நிறுவனத் தனிமைப்படுத்துதலுக்கு, வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை கொண்டு சென்று வைக்கும்போது அவர்களை கண்காணிப்பதற்காக ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். உள் மாநிலத்திலேயே கொரோனா அதிகரிக்கும்போது, வெளி மாநிலத்தவர்களை மட்டும் கட்டுப்படுத்துவது என்பது தார்மீக ரீதியாகவும் சரியாக இருக்காது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெங்களூர் வருவோர் கடும் கெடுபிடிக்கு உள்ளாகிறார்கள். சேவா சிந்து என்ற வெப்சைட்டில் பதிவு செய்து விட்டு கர்நாடகா வரலாம் என்கிறது விதிமுறை. ஆனால் அதில் ஸ்லாட் கிடைப்பதில்லை என்பது நடைமுறை சிக்கலாக இருக்கிறது.