தீயாய் பரவும் கொரோனா.. மூச்சு திணறலில் நோயாளிகள்.. கர்நாடகாவில் ஆக்சிஜன் தேவை 4 மடங்கு அதிகரிப்பு
பெங்களூர்: பெங்களூர் உட்பட கர்நாடக கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு வழங்கப்படுவதற்கான ஆக்சிஜன் தேவையும் மிகவும் அதிகரித்துள்ளது.
ஜூலை மாதம் வரை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக புகழப்பட்ட மாநிலம் கர்நாடகா. பிறகு படிப்படியாக நோய் பரவல் வேகம் அதிகரித்தது. தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பில் நாட்டிலேயே மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது அம் மாநில தலைநகரமான பெங்களூர்.
இதனால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெங்களூர் நகரில் காணப்படும் குளிரான தட்பவெட்பம், கொரோனாவால், நுரையீரல் பாதித்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் கர்நாடகாவில் தினமும் 100 முதல் 150 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவை இருந்தது. ஆனால் தற்போது 400 முதல் 500 மெட்ரிக் டன் அளவுக்கான திரவ நிலையிலான ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா அதிகரிப்பு...ஆக்சிஜன் பற்றாக்குறை...எகிறும் விலை...மாநிலங்கள் திண்டாட்டம்!!
விலை அதிகரிப்பு
தேவை அதிகரித்துள்ள நிலையில் ஆக்சிஜன் விலையும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஒப்பந்தங்கள் மாறியுள்ளதால் விலையும் மாறி உள்ளது என்கிறார்கள். மருத்துவமனை மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிப்பு நிறுவனங்களுடனான பழைய, ஒப்பந்தத்தின்படி ஒரு கியூபிக் மீட்டர் அளவுக்கு ஆக்ஸிஜனுக்கு 13 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை செலுத்தப்பட்டது. ஆனால் புதிய ஒப்பந்தத்தின்படி இதே அளவுக்கான ஆக்ஸிஜனுக்கு 24 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் செலுத்தப்படுகிறது. அவசர காலத்திற்கு தேவை என்றால் ஒரு க்யூபிக் மீட்டர் ஆக்ஸிஜனுக்கு 40 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
கமிட்டி
ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் சப்ளை சரியாக நடக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக இரு வாரங்களுக்கு முன்பாக மாநில அரசு ஒரு கமிட்டியை உருவாக்கி இருந்தது. இந்த கமிட்டி வழங்கியுள்ள தகவல்படி, கர்நாடக மாநிலத்தில் ஆஸ்பத்திரிகளுக்கு 7 நிறுவனங்கள் ஆக்ஸிஜன் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தங்களை பெற்றுள்ளன. இதில், 4 நிறுவனங்கள் பெல்லாரி பகுதியைச் சேர்ந்தவை.
தட்டுப்பாடு இல்லை
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை இல்லை என்று கர்நாடக மாநில தொழில் மற்றும் வணிகத் துறை முதன்மைச் செயலாளர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 400 முதல் 500 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது. 7 தயாரிப்பு நிறுவனங்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். தினசரி தேவையான ஆக்சிஜன் சப்ளை நடந்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொழில்துறை
தொழில் துறைக்கு இந்த ஆக்சிஜன் பயன்படுத்தப்படுவதை குறைத்துக்கொண்டு மருத்துவத் துறைக்கு அதிக அளவுக்கு வழங்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனை ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை இருப்பதாக புகார் கூறிய நிலையில் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள்
இதனிடையே பெங்களூர் நகரில் கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் இருக்கும் சிலர் மூச்சுத்திணறல் காரணமாக கடைசி நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்வதும் அதனால் இறப்பு விகிதம் அதிகரிப்பது வழக்கமாகிவிட்டது. மருத்துவர் பிரசன்னா என்பவர் இதுபற்றி கூறுகையில் ஆக்ஸிஜன் அளவு ரத்தத்தில் குறைந்த பிறகு பல நோயாளிகளும் மருத்துவமனைக்கு வருகிறார்கள். சமீபத்தில் ஆக்சிஜன் அளவு 60 சதவீதம் என்ற அளவுக்குகுறைந்த நிலையில் ஒரு நோயாளி மருத்துவமனை அழைத்து வரப்பட்டார். ஆனால் அந்த நோயாளி மூன்று நாள் கழித்து சிகிச்சை பலனின்றி இறந்தார் என்று தெரிவிக்கிறார்.
பெங்களூர் நிலவரம்
பெங்களூர் உட்பட பல மருத்துவமனைகளிலும் இடவசதி இல்லை என்று கூறியும், மருத்துவர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெறுவதற்கு நோயாளிகள் பலரும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு, ஆக்சிஜன் அளவு எந்த அளவுக்கு இருக்கிறது அது குறைகிறதா என்பதை கண்காணிப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் குளிரான தட்பவெட்பநிலை, கொரோனா நோயாளிகளை மேலும் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.