15,000 பிரசவம் பார்த்த நரசம்மா பாட்டி காலமானார்
பத்மஸ்ரீ விருது பெற்ற சுலகிட்டி நரசம்மா காலமானார்
பெங்களூரு: 15 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் செய்தவர் சுலகிட்டி நரசம்மா என்பவர்தான். 98 வயது நிறைந்து பலரது அபிமானத்தையும், பாசத்தையும் பெற்ற இவர் நேற்று காலமாகி விட்டார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்தான் சுலகிட்டி நரசம்மா. அந்த காலத்தில் வீட்டில் பிரசவம் பார்க்கும் முறைதான் பாதுகாப்பானது, தாய்மார்களுக்கு நம்பிக்கை தரக்கூடியது.
நரசம்மாவின் பாட்டி இந்த வேலையைதான் பார்த்து வந்திருக்கிறார். அவரிடமிருந்துதான் பிரசவம் பார்க்கும் முறையை இவரும் கற்றுக் கொண்டார்.
மனசார வாழ்த்தினர்
பாட்டி துணையுடன் பல பெண்களுக்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். எல்லாமே சுகபிரசவம்... குழந்தை பெற்ற தாய்மார்கள் பலர் நரசம்மாவை மனசார வாழ்த்தி விட்டு சென்றனர்.
சுலகட்டி பெயர்
இதன்பிறகு நரசம்மா தனியாகவே பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். கிராமத்து மருத்துவச்சியை சுலகட்டி என்று அழைப்பார்கள். அதனால் நரசம்மா பெயருக்கு முன்னாடி சுலகிட்டி என்ற பெயரும் ஒட்டிக் கொண்டது.
உடல்நலக்குறைவு
எத்தனையோ கிராமங்களில் அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லாத பல கிராமங்களுக்கும், காடு, மலை போன்ற பகுதிகளுக்கும் நடந்தே சென்று பிரசவம் பார்த்தவர் இவர். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக நரசம்மா உயிரிழந்தார்.
15 ஆயிரம் பிரசவம்
இவருக்கு 2012 ஆம் ஆண்டு சிறந்த குடிமகள் விருதும், இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதும் ,இவருக்கு வழங்கி கவுரப்படுத்தப்பட்டது என்றாலும், 70 வருட சேவையில் 15 ஆயிரத்திற்கும் மேலான சுகப்பிரசவம் அமைய காரணமாக இருந்த நரசம்மா போல இனி யாராலும் வரவே முடியாது.