சித்ரா தற்கொலை செய்யவில்லை.. நடந்தது கொலை.. ஆதாரம் இதோ.. தடயவியல் நிபுணர் பரபரப்பு தகவல்
பெங்களூர்: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகை சித்ராவின் சடல புகைப்படைத்தின் அடிப்படையில் பார்த்தால், அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, அது கொலை என்று, பெங்களூரைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் தினேஷ் ராவ் தெரிவித்துள்ளார்.
நடிகை சித்ரா, சென்னை, நசரத் பேட்டையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. சேலையில் தூக்குப் போட்டதாக கூறப்பட்டது.
சடலம் பெட்டில் படுக்க வைத்த பிறகு எடுத்த படம், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
முகத்தில் நகக்கீறல்
இந்த படத்தில், சித்ரா கன்னத்தில் நகக்கீறல்கள் இருந்தது தெரியவந்தது. முகத்தின் இடதுபக்கத்தில், நகக்கீறல் இருந்தது. தூக்குப் போட்டு தற்கொலை செய்தார் என்றால் கழுத்தில் அடையாளம் இல்லையே? யாருடனாவது ஏற்பட்ட தகராறில் முகத்தில் கீறல் ஏற்பட்டதா? என்ற கேள்விகள் எழுந்தன.
குளிக்க போனபோது வெளியேற்றியது ஏன்
மேலும், வழக்கத்துக்கு மாறாக செல்போனில் அன்று இரவு அதிகநேரம் பேசியது ஏன்? குளிக்கச் செல்லும் முன் கணவரை அறையை விட்டு வெளியேற்றியது ஏன்? கணவர் அறையில் இருந்தாலும் உடைமாற்ற பாத்ரூமை பயன்படுத்தி இருக்கலாமே? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் சித்ரா விவகாரத்தில் எழுந்தன.
மன அழுத்தம்
தொடர்ச்சியான ஷூட்டிங் காரணமாக மன அழுத்தத்தில் இருந்தாரா, கணவருக்கும், தாயாருக்கும் இடையே நிலவிய மனக் கசப்பால் மனமுடைந்து இருந்தாரா போன்ற கேள்விகளும் எழுந்தன. இந்த நிலையில்தான், நடிகை சித்ரா மீட்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த பெங்களூரைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் தினேஷ் ராவ் ஒரு திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று விளக்கமளித்துள்ளார்.
தாக்குதல் நடந்துள்ளது
முகத்தில் பதிவான காயங்கள்தான் எந்த ஒரு வழக்கின் விசாரணையிலும் அடிப்படை. சித்ரா புகைப்படங்களை பார்த்தபோது, முகத்தின் மீது காயங்கள் இருப்பதை கவனிக்க முடிந்தது. இதை வைத்து பார்த்தால் கொலையாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது. தற்கொலைக்கு வாய்ப்பு கிடையாது. வேறு யாராவது ஒருவர் தாக்குதல் நடத்த முற்பட்டபோது, அதை இவர் தடுக்கும் போதுதான் இது போன்ற காயங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. இவ்வாறு தினேஷ் ராவ் தெரிவித்துள்ளார்.
திருப்பங்கள்
தடயவியல் நிபுணர்கள்தான் எந்த ஒரு குற்றவழக்கின் விசாரணையிலும் முக்கிய பங்கு வகிப்பவர்கள். அப்படியான ஒரு தடயவியல் நிபுணரான தினேஷ் ராவ், இவ்வாறு ஒரு கருத்தை கூறியுள்ள நிலையில், சென்னை போலீசாரும், பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே சித்ரா மரண வழக்கு பல திருப்பங்களை சந்திக்க உள்ளது.