அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு விப் பிறப்பிக்க கட்சி தலைமைக்கு அதிகாரம் உள்ளது: சபாநாயகர் அதிரடி உத்தரவு
பெங்களூர்: அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு விப் உத்தரவு பிறப்பிக்க சட்டசபை குழு தலைவர்களுக்கு அதிகாரம் உள்ளது என்று, கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது அம்மாநில அரசியலில் பல திருப்பங்களுக்கு காரணமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர், தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் விரைந்து ஏற்க வேண்டும் என கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சட்டசபைக்கு செல்வதும், தவிர்ப்பதும், அதிருப்தி எம்எல்ஏக்கள் விருப்பம் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் விப் உத்தரவு பிறப்பிக்க முடியுமா, முடியாதா என்ற குழப்பம் ஏற்பட்டது.
விப் உத்தரவு
இதுதொடர்பாக கடந்த வியாழக்கிழமை, பாயின்ட் ஆப் ஆர்டர் பிரச்சினை கிளப்பினார், காங்கிரஸ் கட்சி சட்டசபை குழு தலைவர் சித்தராமையா. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பு இதில் விளக்கம் தேவை என்றும் சித்தராமையா தெரிவித்தார். இதையடுத்து, மாநில அட்வகேட் ஜெனரலுடன் சபாநாயகர் ஆலோசனை நடத்தி வந்தார். இன்று காலை சபை கூடியதும், இது பற்றி, சபாநாயகர் தனது முடிவை அறிவித்தார் (ரூலிங்).
அட்வகேட் ஜெனரல்
ரமேஷ்குமார் கூறியதாவது: அதிருப்தி எம்எல்ஏக்களை, வலுக்கட்டாயமாக அழைத்து வரக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால், சட்டசபை குழுத் தலைவர் எடுக்கும் முடிவுக்கும், அதற்கும் தொடர்பு இல்லை என்று அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். அரசியல் சாசனத்தின் 10 ஆவது அட்டவணையில் சட்ட சபைத் தலைவருக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, விப், உத்தரவை பிறப்பிக்க உங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. இது தான் எனது தீர்ப்பு. இவ்வாறு சபாநாயகர் தெரிவித்தார்.
அதிகாரம்
சபாநாயகரின் இந்த உத்தரவின் மூலம், அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு விப் உத்தரவை பிறப்பித்து கட்டாயப்படுத்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க வைக்க காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளுக்கு, அதிகாரம் கிடைத்து விட்டது. எனவே விரைவிலேயே விப் உத்தரவை, ஆளும் கூட்டணி கட்சிகள் பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சித் தாவல் தடைச் சட்டம்
அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிருப்தி எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தால், அந்த எம்எல்ஏக்களின் பதவி பறிபோகும். நடப்பு சட்டசபை காலத்தில் அவர்களால் அமைச்சராக முடியாது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.