உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி காலமானார்.. தலைவர்கள் இரங்கல்
உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி காலமானார்.
பெங்களூர்: உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி காலமானார். மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்த விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி இன்று அதிகாலை காலமானார்.
இந்தியாவில் உள்ள முக்கியமான இந்து மத தலைவர்களில் விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி முக்கியமானவர். உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதி ஆவார். 88 வயதாகும் விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி, 1931ஆம் ஆண்டு ராமகுஞ்சா என்ற ஊரில் பிறந்தார்.
தனது எட்டாவது வயதில் அவர் சன்னியாசம் பூண்டார். அதன்பின் பல்வேறு மடங்களில் துறவு பூண்டவர் , உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதி ஆனார். இந்தியாவில் மிக முக்கியமான இந்து மத மடமாக, பெஜாவர் மடம் திகழ்கிறது.
அரசியல் ரீதியாக, அத்வானி, உமா பாரதி, வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலருக்கும், விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி நெருக்கமானவர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இவர் உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி கடந்த 20ஆம் தேதி அதிகாலை முதல், மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். நேற்று இவரின் உடல் உறுப்புகள் செயல் இழந்து அவதிப்பட்டார். இதனால் இவர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு முழுக்க உடுப்பி தனியார் மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்று இவரை காண இந்து மத தலைவர்கள், சீடர்கள் பலர் மருத்துவமனையில் கூடினார்கள். ஆனால் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி இயற்கை எய்தினார்.
இவரை நேற்று கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாஜக கட்சியை சேர்ந்த மூத்த எம்பி உமா பாரதி நேரில் சென்று சந்தித்தார். எம்பி உமா பாரதி, விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமியின் சீடர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை இவரின் இறுதிச்சடங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவை சேர்ந்த முக்கியமான தலைவர்கள், இந்து மத தலைவர்கள் பலர் இந்த இறுதி சடங்கில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.