கர்நாடகத்தில் வெள்ளம்.. இடுப்பளவு தண்ணீரில் "நீந்தியும்" பரிசலில் பயணித்தும் கொடியேற்றிய தேசப்பற்று!
பெங்களூர்: கர்நாடகத்தில் கடும் வெள்ளப்பெருக்கால் தண்ணீரில் நடந்து சென்றும் பரிசலில் பயணம் மேற்கொண்டும் மக்கள் கொடியேற்றியதன் மூலம் அவர்களது தேசப்பற்றை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமாக விளாசி வருகிறது. கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இந்த மாநிலங்களில் இன்னும் மழை நின்ற பாடில்லை என்பதால் வெள்ளநீரும் வடியவில்லை.
இந்த நிலையில் இன்று 73-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் செங்கோட்டையில் இன்று காலை 7.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.
அது அந்தந்த மாநிலங்களில் முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் கடும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட நிலையிலும் பாகல்கோட் மாவட்ட மக்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Karnataka: #IndependenceDay celebrated by locals in flood-affected Shurpali village in Bagalkot district. pic.twitter.com/au2WTT8fil
— ANI (@ANI) August 15, 2019
பாகல்கோட் மாவட்டத்தில் இடுப்பு அளவு தண்ணீரில் நடந்து வந்த ஷர்பாலி கிராம மக்கள் தண்ணீருக்கு நடுவில் கொடியேற்றி மரியாதை செலுத்தினர். அது போல் மற்றொரு பகுதியிலும் பரிசலில் பயணம் செய்தபடி வந்த சிலர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
இந்த மழை வெள்ளத்திலும் இவர்களது தேசப்பற்றை நினைத்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.