பெங்களூரை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்.. முழு ஊரடங்கு வராது.. போகாதீங்க.. அரசு அழைப்பு
பெங்களூர்: மும்பை, சென்னை, டெல்லி போன்ற நகரங்களைப் போலவே கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படாது என்றும் எனவே மக்கள் ஊர்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் பெருநகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது பெங்களூர் என்ற பெருமை இருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு வெகுவாக தளர்த்தப்பட்டு பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட பிறகு பெங்களூரில் நோய் பரவல் என்பது அதிகரித்தபடி இருக்கிறது.
கொரோனா நிவாரணம் - தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி
பெங்களூரில் பாதிப்பு அதிகரிப்பு
தினமும் 100க்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலை மாறி இப்போது சுமார் 1,500 பேர் என்ற அளவுக்கு தினசரி பாதிப்புகள் அதிகரித்துள்ளன. சில வாரங்களுக்கு முன்பு சென்னை நிலவரம் எப்படி இருந்ததோ அதே போன்ற நிலைமை பெங்களூருக்கு ஏற்பட்டுள்ளது. போலீசாருக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக , சுமார் 20 காவல்நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
சனிக்கிழமை இரவு முதல் முழு ஊரடங்கு
இந்த நிலையில்தான் கடந்த சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள்கிழமையான இன்று காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மிகவும் அத்தியாவசிய தேவைகள் வழங்கக்கூடிய நிறுவனங்கள் தவிர்த்து பிற எதுவும் இயங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. சாலைகளில் அனாவசியமாக யாரும் வாகனங்களில் செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. முதலாவது ஊரடங்கு காலத்தில் எப்படி ஒரு எடுபிடி இருந்ததோ கிட்டத்தட்ட அந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் இருந்தன.
சொந்த ஊர் பயணம்
இந்த நிலையில்தான் கடந்த சனிக்கிழமை மாலையே, பெங்களூரில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் செல்ல ஆரம்பித்தனர். கொரோனா வைரஸ் பரவல் அச்சம் ஒரு காரணம் என்றால், மறுபடியும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற பயம் மற்றொரு பக்கம் இருந்தது.
முழு லாக்டவுன் வராது
இந்த நிலையில்தான், உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று அளித்த பேட்டியில், லாக்டவுன் நடைமுறைக்கு வரும் என்ற அச்சத்தின் காரணமாகவே பெரும்பாலான மக்கள் பெங்களூரை விட்டு கிளம்பி செல்வதை பார்க்க முடிகிறது. ஆனால், அதுபோன்ற எந்த ஒரு ஊரடங்கும் அமல்படுத்தப்படாது என்று நான் உறுதி அளிக்கிறேன். நீங்கள் எங்கே வசிக்கிறீர்களோ, அங்கேயே தொடர்ந்து வசியுங்கள். உங்களது அன்றாட பணிகளை முன்னெச்சரிக்கையுடன் செய்துகொள்ளுங்கள். மற்றபடி அச்சப்பட்டு பெங்களூர் நகரைக் காலி செய்யும் நிலைமை ஏற்படவில்லை.
Recommended Video
வீட்டிலிருந்தபடி வேலை
அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மற்றும் சிகிச்சைகளை வழங்கும். இவ்வாறு பசவராஜ் பொம்மை உறுதியளித்துள்ளார். பெங்களூரு நகரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. இவை தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்யுமாறு சலுகைகள் வழங்கியுள்ளன. எனவே மக்கள் அனாவசியமாக தெருக்களுக்கு வராமல், பணிகளை ஒழுங்காக செய்து கொண்டு இருந்தாலே போதும். இந்த விவகாரம் பெரிதாகாது என்பது சுகாதாரத்துறை வல்லுநர்கள் கருத்தாக இருக்கிறது. அடுத்தடுத்த வாரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு பெங்களூரில் அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.