5 அறைகள், சமையலர், கணக்கில்லாத பார்வையாளர்கள்... சிறையில் சசிகலா நடத்திய தனி ராஜாங்கம்
A RTI query by activist N. Murthy reveals that Sasikala has been given VIP facilities such as personal cook, unrestricted access to visitors.
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு 5 அறைகள், தனி சமையலர், கணக்கில்லாத பார்வையாளர்கள் சந்திப்பு என வாழ்ந்து வந்ததாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர் என் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதை அடுத்து கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறையில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக சிறைத் துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியிருந்தார். அது போல் அவர் ஷாப்பிங் சென்றுவிட்டு வெளியே சிறைக்குள் வந்த வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.
விசாரணைக்கு உத்தரவு
இது தொடர்பாக கர்நாடக அரசு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனிடையே சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அதன் ஆர்வலர் என் மூர்த்தி தகவல் கோரியிருந்தார்.
4 அறைகளில்
அவருக்கு கிடைத்த தகவல் குறித்து அவர் கூறுகையில் சசிகலாவுக்கு சிறை அதிகாரிகள் 5 அறைகளை ஒதுக்கியிருந்தனர். அவருக்கு ஒரு அறை மட்டுமே ஒதுக்கப்பட்டது. எனினும் மேலும் 4 அறைகளை சிறைத் துறையினர் ஒதுக்கி உள்ளனர். அந்த 4 அறைகளில் தங்கியிருந்த பிற பெண் கைதிகள் சசிகலா வந்தவுடன் மற்ற கைதிகளுடன் நெருக்கடியில் தங்க வைக்கப்பட்டனர்.
மணிக்கணக்கில்
சிறையில் சமையல் செய்யலாம் என்ற சட்ட திட்டங்கள் ஏதும் இல்லாத நிலையில் அஜந்தா என்ற பெண் கைதி ஒருவரை சசிகலாவுக்கு சமையல் செய்ய சிறை துறை அதிகாரிகள் நியமனம் செய்துள்ளனர். சில நேரங்களில் கும்பல் கும்பலாக வருவோர் நேராக சசிகலா அறைக்கு சென்று அங்கு மணிக்கணக்கில் பேசியிருந்துள்ளனர் என்று தகவல்களை மூர்த்தி வெளியிட்டுள்ளார்.
ரூபா புகார்
இவை அனைத்தையும் சிறைத் துறை டிஐஜி ரூபா கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 13- ஆம் தேதி முதல் முறையாக வெளிக் கொண்டு வந்தார். மேலும் சசிகலா இத்தகைய சலுகைகளை அனுபவிக்க ரூ 2 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.