பிஜி ஹாஸ்டல்களில் உணவு இல்லை.. பசியோடு தவிக்கும் பெங்களூர் இளைஞர்கள்.. விரட்டியடிக்கும் போலீஸ்
பெங்களூர்: பி.ஜி. (PG) விடுதிகளில் சிக்கித் தவிப்போர் மற்றும் முதியோருக்கு சென்னையில், தன்னார்வலர்கள் உணவு அளிக்க முன்வந்துள்ளனர், அதே நேரம் பெங்களூரில் நிலைமை மோசமாக உள்ளது. இங்கு பசித்த வயிற்றுக்கு உணவு இன்றி இளைஞர்கள் தவித்து வருவதை பார்க்க முடிகிறது.
Recommended Video
தென் மாநிலங்களில் கேரளாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள மாநிலம் கர்நாடகா. அதிலும், தலைநகர் பெங்களூரில்தான் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், கடந்த 10 நாட்களாகவே, இங்குள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், படிப்படியாக தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதியை வழங்கின.
பிஜி ஹாஸ்டல்கள்
அதில், பலரும் தாங்கள் தங்கியுள்ள பேயிங் கெஸ்ட் எனப்படும் பிஜியில் இருந்து வேலை பார்த்தனர். இணையதள வேகம் குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவே அவர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், அவர்களில் பலரும் பிஜி உரிமையாளர்களால் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். கூட்டமாக இருப்பதால் வைரஸ் பரவி விடும் என்பதால் அவர்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தினர்.
உரிமையாளர்கள் கெடுபிடி
ஒருவேளை வெளியேற மருத்தவர்களுக்கு உரிமையாளர்கள் வேறு வகையில் தொல்லை கொடுத்தனர். இது தொடர்பாக பிடிஎம் லேஅவுட் பகுதியில் பிஜி ஹாஸ்டலில் தங்கி உள்ள ஒரு இளைஞர் நம்மிடம் கூறும்போது "உடனடியாக ஊரைவிட்டு வெளியேற வாய்ப்பு இல்லை என்று நாங்கள் கூறியதும், பிஜி உரிமையாளர் வீட்டின் மின்சார சப்ளையை துண்டித்து விட்டார். எங்களுக்கு வேலை செய்வதற்கு மின்சாரம் தேவை. அதனால் வேறு வழியின்றி கட்டாயமாக ஊரைவிட்டு காலி செய்ய வேண்டியதாயிற்று" என்றார்.
சமையல்
இதையும் கண்டுகொள்ளாமல்தான், சில உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் குடியிருப்பாளர்களை தங்க வைத்திருந்தனர். ஆனால், இப்போது நாடு தழுவிய அளவில் லாக்டவுன் செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதால், அவர்களுக்கான உணவுத் தேவையில் பெரும் பிரச்சினை எழுந்துள்ளது. பல பிஜிக்களில் அங்கேயே உணவு தயாரித்து மூன்று நேரமும் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால், காய்கறி வாங்கி வருவதற்கும் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதால் சமையல்காரர்கள் பலரும் வருவதில்லையாம்.
சமையல்காரர்கள் வருவதில்லை
இதுபற்றி கே.ஆர்.புரம் டின்பேக்டரி அருகே உள்ள ஒரு பிஜியில் வசிக்கக்கூடிய நபர் நம்மிடம் கூறுகையில், போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால் சமையல் செய்பவர்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. காய்கறிகளும் கிடைப்பதில்லை. எனவே எங்களுக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் தவிக்கிறோம் என்று தெரிவிக்கிறார்.
தடியடி
ஹோட்டல்களில், பார்சல் வாங்கிச் செல்லலாம் என்று அரசு கூறியிருந்தாலும், பல ஹோட்டல்கள் திறக்கப்படவில்லை. சில ஹோட்டல்கள் திறந்திருந்தாலும் பார்சல் வாங்க, இளைஞர்களால் அங்கு செல்ல முடியவில்லை. பிடிஎம் லேஅவுட் பகுதியை சேர்ந்த பிஜியை சேர்ந்த 2 இளைஞர்கள் டீ கடைக்கு சென்றபோது, போலீசாரால் தடியடிக்கு உள்ளாகியுள்ள சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால் பல மணிநேரத்திற்கு பட்டினியாக சுற்ற வேண்டிய நிலைக்கு அவர்கள் உள்ளாகியுள்ளனர்.
|
பசிபோக்கும் நடவடிக்கை
இதனிடையே இடம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் பசியை போக்கும் நடவடிக்கையில் சில ஓட்டல் நிர்வாகங்கள் களமிறங்கியுள்ளன. பெங்களுரு கோரமங்களாவிலுள்ள ஒரு ஓட்டல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக இந்த உணவு சப்ளை செய்தது. இதே போன்று மேலும் சில ஓட்டல்கள் முன்வந்துள்ளன. ஆனால் பெங்களூரில் வேலை பார்க்கக் கூடிய இளைஞர்களுக்கு இது போதுமானது கிடையாது. அவர்கள் டெல்லி, மேற்கு வங்கம், பஞ்சாப், தமிழகம் என பல மாநிலங்களில் இருந்தும் வந்து தங்கியுள்ளவர்கள். அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கும், திரும்ப முடியாமல் சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் திணறி வருகிறார்கள்.
|
பேச்சு வார்த்தை
இந்த நிலையில்தான் பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் இன்று இரவு 7 மணிக்கு ஒரு அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். அதில், மருந்துகள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்யக்கூடிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார். காவல்துறை உரிய ஒத்துழைப்பு தரும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டால் பசித்திருக்கும் வயிறுகள் நிரம்பும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.