எடியூரப்பாவை சந்திக்க மறுக்கும் மோடி...! காங்கிரஸ் தலைவர்கள் கிண்டல்
பெங்களூரு: பிரதமர் மோடியை சந்திக்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா பல முறை முயற்சிகள் மேற்கொண்டும் அது தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததில் எடியூரப்பாவின் பங்கு அளப்பறியது. குமாரசாமியை முதல்வர் நாற்காலியில் இருந்து அகற்ற எடியூரப்பா அடித்த அரசியல் ஸ்டண்ட்களை யாராலும் எளிதாக மறந்துவிட முடியாது. இரவு முழுவதும் சட்டப்பேரவையில் உறங்கி, உள்ளிருப்பு போராட்டம் நடத்தி ஒரு வழியாக கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சியை மலர வைத்த பெருமை எடியூரப்பாவையே சேரும்.
இந்நிலையில், பிரதமர் மோடியை வெள்ள நிவாரணம் தொடர்பாக சந்திக்க எடியூரப்பா பல முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு முறை கூட எடியூரப்பாவை சந்திக்க மோடி நேரம் தரவில்லையாம். இதற்கு காரணமாக கூறப்படுவது 75 வயதைக் கடந்தும் அவர் முதல்வர் நாற்காலியை விட்டுத்தராதது தான் எனக் கூறப்படுகிறது. பாஜகவில் 75 வயதை கடந்துவிட்டால் அரசாங்கப் பதவி இல்லை என்ற கொள்கை கடைபிடிக்கப்படுகிறது.
என்னை கிண்டல் செய்யறாங்கம்மா.. பாத்ரூம் பினாயில் குடித்து.. தூக்கில் தொங்கிய பரிதாபம்!
ஆனால் 76 வயதான எடியூரப்பா தனக்குத்தான் முதல்வர் பதவி வேண்டும் என தலைமையிடம் அடம்பிடித்து சாதித்துக்கொண்டார். அப்போது எடியூரப்பாவுக்கு வேறுவழியின்றி அமித்ஷாவும், மோடியும் இசைவு தெரிவித்த நிலையில் இப்போது தங்கள் எதிர்ப்பை பலமாக காட்டத்தொடங்கியுள்ளனர். மேலும், ஆட்சியிலும் எடியூரப்பா சொந்தமாக எந்த முடிவும் எடுக்காத வகையில் அவருக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக மூன்று துணை முதல்வர்களை நியமித்திருக்கிறது பாஜக தலைமை.
வெள்ளநிவாரணம் பெறுவது தொடர்பாக சொந்தக் கட்சியை சேர்ந்த பிரதமரை கூட முதலமைச்சரால் பார்க்க முடியவில்லை என கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் விமர்சனம் செய்வதோடு கிண்டலும் செய்கின்றனர்.