நெருங்கும் கர்நாடக தேர்தல்! ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைத்த பிரதமர்! ஆசியாவிலேயே பெரியதாம்
கர்நாடகாவுக்கு வரும் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி இன்று அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கு வருகிறார்.. அங்குப் பிரதமர் மோடி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் புதிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை அவர் திறந்து வைத்தார்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
தென்மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்த ஒரே மாநிலம் கர்நாடகா என்பதால் அங்கு ஆட்சியைத் தக்க வைக்க பாஜக முயல்கிறது. தேர்தல் நடைபெறும் கர்நாடகாவில் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகா தேர்தல்: குவியும் நிதி, திட்டங்கள்- நாளை ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறக்கும் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி கர்நாடக பயணம்
இதனிடையே பிரதமர் மோடி இன்று கர்நாடக மாநிலத்திற்கு வந்துள்ளார்.. தேர்தல் நடைபெறும் கர்நாடகாவுக்கு இந்தாண்டு மூன்றாவது முறையாக வரும் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்... பெங்களூருவில் 'இந்திய எரிசக்தி வாரம் 2023' மாநாட்டையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.. மேலும், பெங்களூரை அடுத்துள்ள உள்ள துமகுருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் புதிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மாநாடு
இன்று பெங்களுருவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த "இந்தியா எனர்ஜி வீக் 2023" நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 8 வரை நடைபெறும். இந்த நிகழ்வில் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்த E20 எரிபொருளைப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.. புதுப்பிக்கத்தக்க எரிபொருளுக்கு மாறும் போது காத்திருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பினரும் விவாதிக்கின்றனர். இதில் உலகம் முழுவதும் இருந்து 30,000 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். சர்வதேச எண்ணெய் நிறுவன உரிமையாளர்களுடன் ஒரு வட்ட மேசை உரையாடலிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
ஹெலிகாப்டர் தொழிற்சாலை
மேலும் மாலை துமகூருவில் ஹெச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.. இது இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு தொழிற்சாலையாக இருக்கும்.. இது நாட்டின் ஹெலிகாப்டர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும்.. இது மட்டுமின்றி, துமகுருவில் தொழில்துறை நகரங்கள் மற்றும் ஜீவன் மிஷன் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தேர்தல் மாநிலம்
இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் கர்நாடகாவுக்குப் பிரதமர் மோடி ஏற்கனவே, இந்தாண்டு இரண்டு முறை சென்றுள்ளார். அப்போதும் பல்வேறு திட்டங்களை அவர் திறந்து வைத்தார். தேர்தல் அறிவிப்பு வரும் முன்பு, மேலும் சில முறை பிரதமர் மோடி கர்நாடகா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இம்மாத இறுதியில் அங்குப் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பெங்களூர்- மைசூர் எக்ஸ்பிரஸ் சாலையைப் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.