ஏர்போர்ட்டில் இறங்கியதுமே.. கர்நாடக போலீஸ் எங்கேயோ கொண்டு சென்றனர்.. சஞ்சய் ராவத் பரபர குற்றச்சாட்டு
பெங்களூர்: கர்நாடக காவல்துறை, தன்னை எங்கோ அடையாளம் தெரியாத இடத்திற்கு கொண்டு சென்றதாக, சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கர்நாடகாவிலுள்ள பெல்காம் பகுதி, தங்களுக்கு சொந்தமானது என்கிறது மகாராஷ்டிரா. இது தொடர்பாக நீண்டகாலமாக இரு மாநிலங்களுக்கும் தகராறு நீடிக்கிறது.
சிவசேனா கூட்டணி அரசு மகாராஷ்டிராவில் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த பஞ்சாயத்து பெரிதாகிக் கொண்டே போகிறது. எனவே, சிவசேனா தலைவர்கள் பலரையும் பெல்காமிற்குள் அனுமதிக்க கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு தடை விதித்துள்ளது.
விமான நிலையம்
இந்த நிலையில்தான், இன்று பெல்காமில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்க சஞ்சய் ராவத் பெல்காம் வருகை தந்தார். அவர் பெல்காம் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். எங்கே என்பதுதான் தெரியவில்லை.
இது என்ன கட்டுப்பாடு
இதனால் கோபமடைந்த சஞ்சய் ராவத் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், "பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ரோஹிங்கியாக்கள் இந்தியாவுக்குள் நுழைய முடியும், ஆனால் மகாராஷ்டிராவிலிருந்து யாரும் பெல்காமிற்கு செல்ல முடியாது. இது தவறு. ஒரு பிரச்சினை உள்ளது உண்மைதான், ஆனால் ஒருவருக்கொருவர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய அளவுக்கு இது இருக்கக்கூடாது" என்று தெரிவித்தார்.
|
போலீஸ் நடவடிக்கை
சஞ்சய் ராவத் பெல்காம் மாவட்டத்திற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசால் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று, இந்த கெடுபிடி அரங்கேறியுள்ளது. போலீசார் என்னை எங்கோயோ அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்றனர் என்றும் அவர் கூறினார். "பெல்காமில் கலாச்சார மற்றும் இலக்கிய நிகழ்ச்சி உள்ளது, மக்களுடன் பேச நான் அங்கு செல்வேன். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தால், அது இருக்கட்டும்" என்று சஞ்சய் ராவத் மேலும் கூறினார்.
அமைச்சர்
பெல்காம் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா அமைச்சர் ராஜேந்திர பாட்டீல் யேத்ராவ்கர் நேற்று போலீசார் தன்னை மோசமாக கையாண்டதாகவும், பேசுவதை நிறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். ராஜேந்திர பாட்டீல் யேத்ராவ்கர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டது, 1980 களில் மொழி கலவரத்தில் இறந்த மராத்தி சார்பு ஆர்வலர்களின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட தியாக தின நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்றுதான். அவர் நிகழ்ச்சியில், பேசுவதும், தடுத்து நிறுத்தப்பட்டது.