3 மாஜி அமைச்சர்கள் vs எம்எல்ஏ.. அரசியல் சதுரங்கத்தில் பலியான உயிர்கள்.. பெங்களூர் கலவர பகீர் பின்னணி
பெங்களூர்: அரசியல் சூழ்ச்சிகளை மையமாக வைத்து தமிழில் வெளியான திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்கான அரசியல் சூழ்ச்சி தான் பெங்களூர் வன்முறைக்கு காரணம் என்ற தகவல்கள் தற்போது அம்பலமாகி கொண்டிருக்கிறது.
ஆகஸ்ட் 11-ஆம் தேதி பெங்களூரு வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தினமாக மாறியது இரவோடு இரவாக புலிகேசி நகர் தொகுதியின் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி வீட்டை சுற்றிவளைத்த ஒரு கும்பல், பெட்ரோல் ஊற்றி வீட்டுக்கு தீ வைத்தது. அந்த பகுதியில் உள்ள இரண்டு காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன.
ஒரு கட்டத்தில் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவானது. இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியது காவல்துறை, இதில் 3 பேர் பலியாகினர்.
பெங்களூர் கலவரத்தின்போது.. இந்துக் கோவிலை காப்பாற்ற.. அரண் போல நின்ற இஸ்லாமியர்கள்!
கொரில்லா வகை தாக்குதல்
போலீஸ் விசாரணையின் போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. காவல்நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொரில்லா வகையை சேர்ந்த.. சுற்றிவளைத்து திடீரெனத் தாக்கும் முறையைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. இத்தனைக்கும் அகண்ட சீனிவாச மூர்த்தியின் உறவினர் ஃபேஸ்புக்கில் இஸ்லாம் மதத்தினர் தொடர்பாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து பற்றி ஆரம்பத்தில் பெரிய மோதல் எதுவும் ஏற்படவில்லை. இஸ்லாமிய சமூகத்தினர் திரண்டுவந்து பேஸ்புக் பதிவு வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் வற்புறுத்தினர். காவல்துறை துணை கமிஷனர் வருகைதந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதுவரை எந்த ஒரு வன்முறையும் நிகழவில்லை.
அரசியல் சூழ்ச்சி
ஆனால், காவல்துறை உறுதி அளித்த பிறகும் கூட, திடீரென எம்எல்ஏ வீட்டு மீதான தாக்குதலும், அதையடுத்து காவல் நிலையங்கள் மீதான தாக்குதலும் காவல்துறைக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஒரே கோணத்தில் இல்லாமல் பல கோணங்களில் போலீஸ் விசாரணையை ஆரம்பித்தது. அப்போதுதான் அரசியல் சூழ்ச்சி இதன் பின்னணியில் இருப்பது அம்பலமாகியுள்ளது.
கவுன்சிலர் டூ எம்எல்ஏ
முதலில் கவுன்சிலராக வாழ்க்கையை தொடங்கினார் சீனிவாச மூர்த்தி ஆனால் அவரது வளர்ச்சி விஸ்வரூபமாக இருந்தது. தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு அசத்தினார். இதில் அசத்தினார் என்ற வார்த்தை பிரயோகத்திற்கு அலங்காரத்தை தவிர்த்த காரணம் இருக்கிறது. ஆம்.. ம.ஜ.த கட்சியை பொறுத்தளவில் அது ராம்நகரம், ஹாசன், பெங்களூர் ஊரகம், மண்டியா போன்ற ஒரு சில பிராந்தியங்களில் வலுவான கட்சியே தவிர, பெங்களூர் நகரில் அதற்கு செல்வாக்கு கிடையாது. தனிப்பட்ட செல்வாக்கால்தான் இந்த வெற்றியை பதிவு செய்தார் அகண்ட சீனிவாச மூர்த்தி.
கவுன்சிலர் டூ எம்எல்ஏ
முதலில் கவுன்சிலராக வாழ்க்கையை தொடங்கினார் சீனிவாச மூர்த்தி ஆனால் அவரது வளர்ச்சி விஸ்வரூபமாக இருந்தது. தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு அசத்தினார். இதில் அசத்தினார் என்ற வார்த்தை பிரயோகத்திற்கு அலங்காரத்தை தவிர்த்த காரணம் இருக்கிறது. ஆம்.. ம.ஜ.த கட்சியை பொறுத்தளவில் அது ராம்நகரம், ஹாசன், பெங்களூர் ஊரகம், மண்டியா போன்ற ஒரு சில பிராந்தியங்களில் வலுவான கட்சியே தவிர, பெங்களூர் நகரில் அதற்கு செல்வாக்கு கிடையாது. தனிப்பட்ட செல்வாக்கால்தான் இந்த வெற்றியை பதிவு செய்தார் அகண்ட சீனிவாச மூர்த்தி.
தமிழர்கள் பகுதி
இத்தனைக்கும் புலிகேசி நகரில் காங்கிரஸ் வேர் விட்டு வளர்ந்திருந்தது. அங்குள்ள பல கவுன்சிலர்கள் காங்கிரஸ்காரர்கள். பூர்வீக தமிழர்கள். இவர்கள் வாக்காளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இவர்கள் கை காட்டும் காங்கிரஸ் வேட்பாளர்தான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்படுவது இத்தொகுதி வாடிக்கை. ஆனால், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இருந்தபடி எம்எல்ஏவாக அகண்ட சீனிவாச மூர்த்தியால் பதவிக்கு வர முடிந்தது என்றால், அவரின் மக்கள் செல்வாக்கு என்ன என்பதையும், தேர்தல் வியூகம் எத்தகையது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
காங்கிரஸ் கோட்டை
இங்குதான் அடுத்ததாக ஒரு வியூகத்தை கையில் எடுத்தார் அகண்ட சீனிவாச மூர்த்தி. காங்கிரஸ் கோட்டையான புலிகேசி நகரில் எதற்காக கஷ்டப்பட்டு காங்கிரசை எதிர்த்து உழைக்க வேண்டும். காங்கிரசிலேயே சேர்ந்துவிட்டால்.. வெற்றிக் கனி எளிதாக மடியில் வந்து விழுமல்லவா.. இப்படித்தான் யோசித்து காங்கிரசில் சேர்ந்தார் அகண்ட சீனிவாச மூர்த்தி. ஒரு வகையில் அவர் எடுத்த முடிவு நல்லதுதான் என்றாலும், ஏற்கனவே காங்கிரசில் கோலோச்சியவர்களால் இதை சகிக்க முடியவில்லை.
அசைக்க முடியாத தலைவர்
பெங்களூரு நகரைச் சேர்ந்த, காங்கிரசின் மூன்று முன்னாள் மாநில அமைச்சர்கள், அகண்ட சீனிவாச மூர்த்தி திடீரென பெங்களூரில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுப்பதை ரசிக்கவில்லை. எனவே மறைமுகமாக தொல்லைகளை கொடுக்க ஆரம்பித்தனர். இப்படித்தான் பல மாதங்கள் முன்பு, புலிகேசி நகர் பார்க்க தமிழகம் மாதிரி இருக்கிறது. அகண்ட சீனிவாச மூர்த்தியும், அவர் ஆதரவு கவுன்சிலர்களும் தமிழில் சுவர் விளம்பரங்கள் எழுதியுள்ளனர் என்று கன்னட அமைப்பினர் புலிகேசி நகரில் போராட்டம் நடத்தினர். இதன் பின்னணியில், இந்த காங்கிரசின் பழம் தின்று கொட்டை போட்ட 'மும்மூர்த்திகள்' இருப்பதாக அப்போதே சந்தேகம் எழுந்தது.
அதிரடி கைது
இந்த நிலையில்தான், அகண்ட சீனிவாச மூர்த்தி வீட்டை தீ வைத்து எரிக்கும் அளவுக்கு வன்முறை வளர காரணமும், இதே மும்மூர்த்திகள்தான் என்று கூறப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான பேஸ்புக் போஸ்டை இவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, சில அமைப்பினரை தூண்டிவிட்டு இந்த தாக்குதலை அரங்கேற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறையில் உள்ளது. பெங்களூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜுக்கு நெருக்கமானவரும், காங்கிரஸ் கட்சியின் நாகரவரா வார்டு கவுன்சிலர் இர்ஷாத் பேகம் என்பவரின் கணவருமான கலீம் பாஷாவை போலீஸ் கைது செய்துள்ளது இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
Recommended Video
ஆடு புலி ஆட்டம்
புலிகேசி நகரிலுள்ள இஸ்லாமியர் வாக்குகளை, பிரித்தாண்டு, அகண்ட சீனிவாச மூர்த்திக்கு சிக்கலை ஏற்படுத்தவும், காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம் கெட்ட பெயரை ஈட்டித் தரவும், அரங்கேற்றப்பட்டிருக்கும் அரசியல் நாடகத்தில், 3 பேர் பலியாகியுள்ளதுதான் வேதனையின் உச்சம். அரசியல்வாதிகளின், ஆடு புலி ஆட்டத்தில், பலியாடுகளாக மக்கள் மாறியுள்ளனர் என்பதுதான் கர்நாடக கள யதார்த்தம்.