மீண்டும் பரபரப்பில் பெங்களூர்.. கொரோனா நோயாளிகள் வீடு முன்பு போஸ்டர், பேரிகேட்கள்
பெங்களூர்: புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து பெங்களூரில் மீண்டும் கொரோனா நோயாளிகள் வீட்டுக்கு எதிரே போஸ்டர் ஒட்டுவது, சாலை தடுப்புகள் அமைப்பது போன்ற நடைமுறை மறுபடி தொடங்கிவிட்டன.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் நோயாளிகள் வீடுகளுக்கு வெளியே போஸ்டர் ஒட்டுவது பழக்கத்தை நிறுத்துவதாக மாநகராட்சி அறிவித்தது. சமூகத்தில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்துவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து இவ்வாறு செய்யப்பட்டது.
சிலர் இதை ஆதரித்தாலும் சிலர், கொரோனா நோயாளிகள் பற்றி விபரம் அண்டை அயலாருக்கு தெரியாமல் சிக்கல் ஏற்படும் நோய் பரவும் என்று அச்சம் தெரிவித்தனர்.
35 சதவீதம் நோயாளிகள்
ஆனால் இப்போது பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய கொரோனா அங்கிருந்து கர்நாடகாவுக்கு வருகை தந்தோர் மூலமாக பரவியது கண்டறியப்பட்டுள்ளது. புதிய வகை வைரஸ் தாக்கத்தில் நாட்டின் 35% நோயாளிகள் கர்நாடகாவில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பெங்களூரில் மீண்டும் நோயாளிகளின் வீடுகளுக்கு எதிரே போஸ்டர் ஒட்டுவது, அந்த சாலையில் பேரிகார்டு அமைப்பது உள்ளிட்ட பணிகள் ஆரம்பித்துவிட்டன. இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்து கொரோனாநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் வீடுகளில் மட்டும் இவ்வாறு செய்யப்படுகிறது.
நோயாளிகள் வீடுகள்
இதுபற்றி பெங்களூர் மாநகராட்சியின் சுகாதாரத்துறை சிறப்பு ஆணையாளர், ராஜேந்திரசோழன் கூறுகையில், பிரிட்டனில் இருந்து திரும்பிய கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களின் குடும்பத்தினரும் அவர்களது குடும்பத்தினரை ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்த ஏற்பாடு செய்தோம். ஆனால் அவர்கள் அங்கு செல்வதற்கு மறுப்பதால் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு அங்கு வேறு யாரும் செல்ல முடியாதபடி போஸ்டர்கள் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. வீடுகளுக்கு வெளியே மட்டும்தான் போஸ்டர் ஒட்டப்படுகிறது. மற்ற இடங்களில் ஒட்டப்படவில்லை, என்று அவர் விளக்கம் அளித்தார்.
ஹோட்டல்கள்
இதனிடையே, கொரோனா நோயாளிகளின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்பாளர்கள் சில ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த ஹோட்டலுக்கு வெளியே அது குறித்த விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது போன்ற ஹோட்டல்கள், மெஜஸ்டிக், பொம்மனஹள்ளி, மகாதேவபுரா, தாசரஹள்ளி ஆகிய மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
குடியிருப்புகளில் தனிமை
பிரிட்டனில் இருந்து திரும்பியவர்களில் யாருக்கெல்லாம் கொரோனா கண்டறியப்பட்டதோ, அவர்கள் பழகிய 57 இரண்டாம் நிலை தொடர்பாளர்கள், 48 முதல் நிலை தொடர்பாளர்கள் குமாரசாமி லேஅவுட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். மேலும் 4 முதல் நிலை தொடர்பாளர்கள் ஜேபி நகர் பகுதியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். பிரிட்டனிலிருந்து திரும்பிய கொரோனா நோயாளிகளை தொடர்பு கொண்ட மற்றவர்கள் ஹோட்டல் அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.