மடாதிபதிகளின் கார்களுக்கு சுங்க வரி வசூல் செய்யக் கூடாது.. நிர்வாணமான தர்ணா போராட்டத்தால் பரபரப்பு!
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மடாதிபதிகளின் வாகனங்களுக்கு சுங்க வரி வசூலிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்து மடாதிபதி ஒருவர் நிர்வாணமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
சிக்கபள்ளாபுரா மாவட்டம் கவுரிபிதனூரில் சித்தரோட் மிஷன் என்ற ஆசிரமம் உள்ளது. இங்கு மடாதிபதியாக இருப்பவர் டாக்டர் ஆரோரபாரதிசுவாமி. இவர் நேற்று காலை பெங்களூரில் இருந்து கவுரிபிதானூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ராமோனஹள்ளியை அடுத்த திப்பகானஹள்ளியில் உள்ள தேசிய சுங்கச்சாவடியில் அவரது காரை ஊழியர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.
மத வெறி.. மத்திய அரசு 8 அடி பாய்ந்தால்.. யோகி 16 அடி பாய்கிறாரே.. கம்யூனிஸ்ட் கட்சி கடும் தாக்கு!
மடாதிபதி
அப்போது அவரிடம் டோல் கட்டணத்தை செலுத்த வேண்டும் என ஊழியர்கள் கூறினர். ஆனால் அவரோ நான் கட்டணத்தை செலுத்த மாட்டேன், எனது வாகனத்திற்கு கட்டணம் வாங்கக் கூடாது, வாகனத்தை அனுமதியுங்கள் என வலியுறுத்தினார். இதனால் ஊழியர்களுக்கும் மடாதிபதிக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.
கோரிக்கை
திடீரென யாரும் எதிர்பார்க்காத வேளையில் ஆடைகளை கழற்றிய மடாதிபதி நிர்வாண கோலத்தில் தனது காரின் முன்பு அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டம் நடத்தினார். மடாதிபதிகள், சாமியார்கள், சாதுக்கள் பயணம் செய்யும் கார்களுக்கு சுங்கவரி வசூலிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தார்.
மடாதிபதி
மேலும் இதற்கான உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனிடையே மடாதிபதி நிர்வாணமாக தர்ணா போராட்டம் நடத்தி வரும் தகவல் டோல்கேட் மேலாளருக்கு கிடைத்தது. அவர் வந்து மடாதிபதியிடம் பேசி காரை அனுப்பி வைத்தார்.
மேலதிகாரிகள்
இதுகுறித்து சுங்கச்சாவடி மேலாளர் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில் சுங்கச்சாவடிகளில் டாக்டர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்பட சிலரின் வாகனங்களுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்ககூடாது என்று தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி கழகம், மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மடாதிபதிகள், சாமியார்கள் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்ககூடாது என்று கூறவில்லை. இது தொடர்பாக மேலதிகாரிகளிடம் தெரிவிப்பேன் என்றார்.