பெங்களூரே ஸ்தம்பிப்பு.. பள்ளி கல்வி கட்டணத்தை குறைக்க கூடாதாம்.. ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள் பேரணி
பெங்களூர்: பள்ளிக் கல்வி கட்டணத்தை குறைக்க கூடாது என்று வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தால், பெங்களூரின் மத்திய பகுதி ஸ்தம்பித்துப் போய் விட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா...!
இன்று அப்படித்தான் நடந்தது. பள்ளி கல்வி கட்டணத்தை குறைக்கக் கூடாது என்று வலியுறுத்தி, பெங்களூரின் மையப்பகுதியான சிட்டி ரயில் நிலையம் முதல் சுதந்திர பூங்கா வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெற்ற இந்த பேரணி மத்திய பெங்களூர் பகுதியை ஸ்தம்பிக்கச் செய்து விட்டது.
மேலே இருந்து எடுக்கப்படும் ட்ரோன் கேமரா படம் இந்த போராட்டத்தின் வீரியத்தை அப்படியே புட்டுப்புட்டு வைப்பதைப் போல காட்டி விட்டது.
பெற்றோர் கோரிக்கை
கொரோனா நோய் பரவல் காரணமாக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதால், கர்நாடக அரசு பள்ளி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரி பெற்றோர்கள், கல்வித்துறை அமைச்சர் வீட்டு முன்பாக போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக கடந்த மாதம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் ஒரு உத்தரவு பிறப்பித்தார்.
பள்ளிக் கட்டணம்
மொத்த டியூஷன் பீஸ் கட்டணத்தில் 70 சதவீதம் மட்டும்தான் பெற்றோர்களிடமிருந்து பள்ளிகள் வசூலிக்க வேண்டும். 30% தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. எந்த கல்வி திட்டத்தை கற்றுக் கொடுக்கக் கூடிய பள்ளியாக இருந்தாலும் சரி, அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் கல்விக் கட்டணத்தில் தள்ளுபடி கொடுக்க வேண்டும் என்பது உத்தரவு. இதனால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் அதிர்ச்சி அடைந்தன.
பெங்களூரில் போராட்டம்
இணையதளம் வாயிலாக கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டு வந்த போதிலும் கூட, ஆசிரியர்களுக்கான ஊதியம் கொடுப்பது போன்ற செலவினங்களுக்கு கல்வி கட்டணத்தைத் தான் தாங்கள் நம்பி இருப்பதாக அரசுக்கு பள்ளி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்தன. அரசு இதுவரை தனது உத்தரவை வாபஸ் பெறவில்லை என்பதால், பெங்களூர் நகரில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துவதற்கு கர்நாடக தனியார் பள்ளி மேனேஜ்மென்ட், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் போன்ற அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
பிரமாண்ட பேரணி
இதன்படி பெங்களூரு நகரின் மையப்பகுதியில் உள்ள சிட்டி ரயில் நிலையம் முதல் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஃப்ரீடம் பார்க் என்ற பகுதி வரை பேரணி நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்காவிட்டால் தங்களது ஊதியத்தை, பள்ளி நிர்வாகங்கள் பிடித்தம் செய்யப்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக பலரும் போராட்டத்தில் பங்கேற்க வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பல தனியார் பள்ளிகளிலும் இன்று இணைய தளம் வாயிலாக கல்வி கற்றுக் கொடுப்பதற்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.
தட்டிக் கழித்த அரசு
அதே நேரம் கொரோனா நோய் பரவல் காரணமாக ஒரு பொருளாதார பிரச்சனை வரும் போது, பெற்றோருக்கு ஆதரவாக மட்டும் யோசித்த அரசு, பள்ளி நிர்வாகங்களின் நிதிச்சுமை, ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கான சம்பளம் போன்ற விஷயங்களை யோசிக்கவில்லை. அரசு இந்த விஷயத்தில் மொத்தமாக கைகழுவியது தான் பிரச்சனைக்கான காரணம். அரசிடம் நிதி இல்லை என்பதால் நிதி ஒதுக்க முடியவில்லை என்கிறார்கள்.. ஆனால், பள்ளி நிர்வாகங்கள் மட்டும் எப்படி நிதிச்சுமையை ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கேள்வி பள்ளி நிர்வாகிகள் தரப்பிலிருந்து எழுகிறது. இருப்பினும் இந்த பிரம்மாண்ட பேரணி காரணமாக கர்நாடக அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டு மறுபடியும் கல்வி கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கி விடுமோ என்ற அச்சம் பெற்றோரிடையே இருக்கிறது.