வருமான வரி அதிகாரிகள் வீடுகளில், கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தும்.. குமாரசாமி தடாலடி
பெங்களூர்: கர்நாடக ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு, எதிராக வருமான வரி சோதனைகள் நடைபெறும் நிலையில், அதற்கு பதிலடியாக வருமான வரித்துறை அலுவலகம் எதிரே, கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் மூத்த தலைவர்கள் தர்ணா நடத்தினர்.
கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக அமைச்சர் புட்டசாமி மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் இன்று, காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
பாஜகவில் ஓரங்கட்டப்பட்ட சத்ருஹன் சின்ஹா.. காங்கிரஸில் இணைகிறார்
பெரும் போராட்டம்
இதனால் முதல்வர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பெங்களூரிலுள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பாக இன்று மாலை, குமாரசாமி தலைமையில், மஜத தலைவர்கள், காங்கிரசின் சித்தராமையா தலைமையில் அக்கட்சி தலைவர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் குதித்தனர். அமைச்சர்கள் பலரும் அதில் பங்கேற்றனர்.
டீல் பேசும் அதிகாரிகள்
குமாரசாமி பேசுகையில் கூறியதாவது: வருமான வரித்துறை அதிகாரிகள் தேவலோகத்தில் இருந்து குதித்துள்ளீர்களா? நீங்க ரெய்டு நடத்தவும், ரெய்டு நடத்தாமல் இருக்கவும் எப்படி டீல் பேசுகிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியாது என நினைத்துக் கொண்டு உள்ளீர்களா? மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசு போர் தொடுத்து உள்ளது.
ஐடி அதிகாரிகள் வீடுகள்
மாநில லஞ்ச ஒழிப்பு காவல்துறையை கொண்டு, வருமான வரித்துறை அலுவலர்கள் வீடுகளில் நாங்களும் சோதனை நடத்த தயங்க மாட்டோம் என எச்சரிக்கிறேன். இன்று அடையாள போராட்டத்தை மட்டும் நடத்தியுள்ளோம். இனிமேல் விடமாட்டோம். இதற்கு முன்பு நாங்கள் எந்த சோதனையையும் எதிர்த்தது இல்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் வீடுகளில் மட்டும் ரெய்டு நடப்பதைத்தான் எதிர்க்கிறோம்.
விஞ்ஞானிகள் சாதனை
வருமான வரித்துறை சோதனை போன்ற அரசியல் மட்டுமின்றி, பலனற்று போன செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்திவிட்டோம் என்று அறிவித்து தேர்தல் லாபம் பார்க்க முயன்ற சின்னத்தனமான அரசியலை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்ததையும் நாம் பார்த்துள்ளோம்.
பாத்ரூமில் இருந்தவர்கள் கூட பிரதமர் ஏதோ பெரிதாக அறிவிக்கப்போகிறார் என நினைத்து டிவி முன்பு வந்து உட்கார்ந்தனர். ஆனால் அவரோ, விஞ்ஞானிகள் செய்த சாதனையை தானே நிகழ்த்தியதுபோல பேசிவிட்டு சென்றார். இவ்வாறு குமாரசாமி ஆவேசமாக பேசினார்.