7 காங். எம்எல்ஏக்கள் மிஸ்சிங்.. பெரும்பான்மை இழந்த கர்நாடக அரசு.. சட்டசபையை நடத்த விடாத பாஜக
பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்று குற்றம்சாட்டி, சட்டசபைக்குள், பாஜக எம்எல்ஏக்கள் 2வது நாளாக இன்றும் தர்ணா நடத்தியதால் அவை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், 104 தொகுதிகளை வென்று, தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்த போதிலும், 224 தொகுதிகளை கொண்ட சட்டசபையில், அக்கட்சியால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை.
இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன. மஜத தலைவர், குமாரசாமி தலைமையில் கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இருப்பினும் ஆபரேஷன் லோட்டஸ் மூலமாக, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சிலரை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை கலைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இதனிடையே, நேற்று, கர்நாடக அரசின், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், திடீரென ஆளும் கூட்டணியின், 10 எம்எல்ஏக்கள் மாயமாகினர்.
அனைத்து எம்எல்ஏக்களும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். தவறாமல் அனைவரும் ஆஜராக வேண்டும் என்று கொறடா கணேஷ் ஹுக்கேரியும், உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் நேற்று சட்டசபைக்கு வரவில்லை. மதசார்பற்ற ஜனதா தளத்தின் 1 எம்எல்ஏ வரவில்லை.
இருப்பினும் அதில் 3 பேர் மாலைக்குள் சட்டசபை வந்துவிட்டனர். இன்னும் 7 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மிஸ்சிங். காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு 117 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு தேவை 113 எம்எல்ஏக்கள் ஆகும்.
ஆளும் கூட்டணியின் 7 எம்எல்ஏக்கள் மாயமாகியுள்ளதால், சட்டசபையில் 110 எம்எல்ஏக்கள் ஆதரவுதான் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே இது மெஜாரிட்டி பலம் இல்லாத ஆட்சி என கூறி, பாஜக எம்எல்ஏக்கள் நேற்று முதல் சட்டசபையில் தர்ணா ஆரம்பித்துள்ளனர். நேற்று ஆளுநர் உரையின்போதும் பாஜக எம்எல்ஏக்கள் கோஷமிட்டு கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இன்றும் சபாநாயகர் இருக்கை எதிரே நின்றபடி, ஆட்சி பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும் என்று கோஷமிட்டனர். அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால், நாளை காலை 11 மணிக்கு சட்டசபையை ஒத்திவைத்தார் சபாநாயகர் ரமேஷ் குமார்.