இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு
பெங்களூர்: கர்நாடகா சட்டசபையில் இன்று பகல் 1.30 மணிக்கு முதல்வர் குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் அதிரடியாக உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் - மஜத கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்தனர். மேலும் அவர்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கக்கோரி அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கில், ராஜினாமா கடிதம் மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
நியாயமான காலவரையறைக்குள் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ராஜினாமா விவகாரத்தில், சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வது குறித்து எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறியது.
கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா? கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன?
பெரும் அமளி
இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே, கர்நாடக சட்டப்பேரவை வியாழன்று கூடியது. முதல்வர் குமாரசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். அப்போது, நடந்த விவாதத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஸ்ரீமந் பாட்டீலை, பாஜக.வினர் கடத்தி சென்றதாக அமைச்சர் சிவக்குமார் பேசியதால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
ஆளுநரின் முதல் உத்தரவு
இந்த விவகாரம் குறித்து ஆளுநரிடம் பாஜக முறையிட்டது. இதையடுத்து நேற்று வியாழக்கிழமையே முதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார்.
விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம்
ஆனால் ஆளுநரின் கோரிக்கையை நிராகரித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரை சபை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் விடிய விடிய சட்டசபைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.
ஆளுநர் அதிரடி உத்தரவு
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா கடிதம் அனுப்பி உள்ளார். அதில், சட்டசபையில் வெள்ளிக்கிழமை பகல் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனால் கர்நாடகா அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.