சூறாவளி காற்று சுழன்றடிக்க பெங்களூரில் வெளுத்து வாங்கிய மழை
பெங்களூர்: தெற்கு பெங்களூரில் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை சூறாவளி காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது.
அக்னி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பெய்த இந்த மழையால், குளிர்ச்சியான தட்ப வெப்பம் நிலவிய போதிலும், பல்வேறு இடங்களில் மின் இணைப்பு மற்றும் இணையதள சேவை முடங்கியுள்ளது.
⛈️பெங்களூரில் சூறாவளி காற்றுடன் கன மழை#Bengaluru | #BengaLuruRains pic.twitter.com/Ucu72HR1bL
— Oneindia Tamil (@thatsTamil) May 13, 2019
பெங்களூரில் கடந்த செவ்வாய்க்கிழமை, பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல், ஓரளவு கனமழை பெய்தது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை மாலையில் லேசான அளவுக்கு மழை பெய்து குளிர்வித்தது.
இந்த நிலையில் இன்று மாலை 4 மணி முதல் தெற்கு பெங்களூரில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த சூறை காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. பொம்மனஹள்ளி, பேகூர் ரோடு, சில்க் போர்டு, பிடிஎம் லேஅவுட், மடிவாளா, ஆடிகோடி, கோரமங்கலா, மகாதேவபுரா, பெல்லந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ஜேபிநகர் பகுதியில் மிதமான மழை பெய்தது.
கடும் காற்றுடன் இந்த மழை பெய்ததால், பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு மற்றும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. சில பகுதிகளில் உடனடியாக மின் ஊழியர்கள் பணியாற்றி மின் இணைப்பைத் திரும்ப கொண்டுவந்துள்ளனர். தொடர்ச்சியாக இன்னும் சில நாட்களுக்கு, மழை தொடரும் என்று பெங்களூர் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த மழை காரணமாக பெங்களூர் நகரவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக இன்று பிற்பகல், கோவை நகரில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.