மீண்டும் வந்தார் மணிவண்ணன்.. கொரோனா தடுப்பில் முக்கிய பொறுப்பு! பெங்களூருக்கு 8 பொறுப்பு அமைச்சர்கள்
பெங்களூர்: பெங்களூர் நகரில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்காக 7 அமைச்சர்கள், 8 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை களத்தில் இறக்கியுள்ளது எடியூரப்பா அரசு. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாத பாதி வரையில், தினமும் சுமார் 100 க்கும் கீழே கொரானா வைரஸ் பாதிப்பு பெங்களூரில் பதிவான நிலையில், தற்போது அது தினமும் 1000த்திற்கும் மேல் என்ற அளவுக்குச் சென்றுள்ளது.
சென்னையின் பாதையில் பெங்களூரு பயணிக்கத் தொடங்கி உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
பிற மாநிலங்களில் இருந்து பெங்களூர் வரனுமா.. தனிமைப்படுத்துதல் விதிமுறையை மாற்றியது கர்நாடக அரசு
மோதல் வேண்டாம்
இதற்கு முக்கியமான காரணம் அமைச்சர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. எனவே அமைச்சர்கள் இடையே மோதலை தவிர்ப்பதற்காக பெங்களூரின் மண்டலங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, சீனியர் அமைச்சர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களிடையே உரசல்
துணைமுதல்வர் அஸ்வத் நாராயணன், கொரோனா பராமரிப்பு மையங்களுக்கு பொறுப்பு வகிப்பார். வருவாய்த் துறை அமைச்சரும் பெங்களூரை சேர்ந்த சீனியர் பாஜக தலைவருமான ஆர்.அசோக், தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறித்து ஒருங்கிணைப்பு செய்வார். மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சுதாகர், கொரோனா தொடர்பான கொள்கை முடிவுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை வகுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மற்றும் மீடியாக்களுக்கு பேட்டி அளிப்பார். இவ்வாறு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மண்டலங்கள்
அதேநேரம் மூத்த பாஜக எம்எல்ஏ விஸ்வநாத் எலகங்கா மண்டலத்திற்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்ற பதவியிலும் இருக்கிறார். அஸ்வத் நாராயணன், மேற்கு மண்டல பொறுப்புகளை வகிப்பார், அசோக் தெற்கு மண்டல பொறுப்புகளையும், சோமண்ணா கிழக்கு மண்டலம், சுரேஷ்குமார் பொம்மனஹள்ளி மண்டலம், பசவராஜ் மகாதேவபுரா மண்டலம், சோமசேகர், ராஜராஜேஸ்வரி நகர் மண்டலம் மற்றும் தாசாரஹள்ளி மண்டலத்திற்கு, கோபாலய்யா, என அமைச்சர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள்
தலைமைச் செயலாளர் டி.என். விஜய் பாஸ்கர் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 1 மூத்த ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். துஷார் கிரினாத் (கிழக்கு), ராஜேந்திர குமார் கட்டாரியா (மேற்கு), மணிவண்ணன் (பொம்மனஹள்ளி), நவீன் ராஜ் சிங் (எலஹங்கா), முனிஷ் (தெற்கு), மஞ்சுலா (மகாதேவபுரா), பிசி ஜாஃபர் (தாசரஹள்ளி) மற்றும் விஷால் (ராஜராஜேஸ்வரி நகர்).
ஐஏஎஸ் அதிகாரி மணிவண்ணன்
இதில் கர்நாடக தொழிலாளர் நலத்துறை செயலாளராக பதவி வகித்த தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக ஐஏஎஸ் கேடர் அதிகாரிதான் மணிவண்ணன். ஆனால், தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய சம்பள பாக்கி தொடர்பாக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதால் சில வாரங்கள் முன்பாக இவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். இந்த நிலையில், பொம்மனஹள்ளி போன்ற முக்கியமான பகுதிக்கு பொறுப்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் மணிவண்ணன். இவர் கலெக்டராக பதவி வகித்த கால கட்டங்களிலும், மக்கள் ஆதரவை பெற்றவர், திறமையாக செயல்படக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.