குன்ஹாவிடம் "சிக்கிய" நித்தியானந்தா.. 50 வாய்தாவா.. நீதிபதி ஷாக்.. போலீஸுக்கு அதிரடி உத்தரவு!
பெங்களூரு: தலைமறைவான சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவை நேரில் சந்தித்து நீதிமன்றத்தில் ஆஜராக கோரும் சம்மனை வழங்க வேண்டும் என்று கர்நாடகா போலீசாருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி குன்ஹா உத்தரவிட்டுள்ளார்.
பாலியல் பலாத்கார வழக்கில் பெங்களூரு ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆஜராகவில்லை. இவ்வழக்கில் 50 முறை வாய்தா வாங்கியிருந்தார் நித்தியானந்தா.
இந்நிலையில் நித்தியானந்தா மீதான வழக்குகளை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும் அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரியும் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கை நீதிபதி குன்ஹா இன்று விசாரித்தார்
தமிழ், சமஸ்கிருதத்தில் தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு.. தமிழில் நடத்த கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
இந்த விசாரணையின் போது, நித்தியானந்தா நேரில் ஆஜராகாமல் 50 வாய்தாக்களுக்கு விலக்கு அளித்தது எப்படி என நீதிபதி குன்ஹா கேள்வி எழுப்பினார். மேலும் நித்தியானந்தாவை நேரில் சந்தித்து நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரும் சம்மனை அளிக்கவும் கர்நாடகா போலீசாருக்கு நீதிபதி குன்ஹா உத்தரவிட்டார்.
அப்போது, நித்தியானந்தா இந்தியாவிலேயே இல்லை என கர்நாடகா போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று அனுப்பி வைக்கப்பட்ட சம்மனை நித்தியானந்தாவிடம் நேரில் அளிக்க வேண்டும்; இது தொடர்பாக திங்கள்கிழமை பிற்பகலில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கர்நாடகா போலீசாருக்கு நீதிபதி குன்ஹா உத்தரவிட்டுள்ளார்.
நித்தியானந்தா போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் நித்தியானந்தாவின் இருப்பிடத்தை தெரிவிக்க கோரும் ப்ளூ கார்னர் நோட்டீஸ் ஏற்கனவே இண்டர்போல் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரீபியன் தீவுகளில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அங்கே கைலாசா என்கிற தனிநாட்டை நித்தியானந்தா உருவாக்கியுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டும் உள்ளது. இந்நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் சம்மனை அம்மாநில போலீசார் எப்படி நித்தியானந்தாவிடம் கொடுக்கப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்ஹா யார்?
நீதிபதி குன்ஹா யார் எப்படிப்பட்டவர் என்பதை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் மறந்திருக்க முடியாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான வழக்கில் அவர்களுக்கு அதிரடியாக சிறைத் தண்டனை வழங்கி அதிர வைத்தவர் குன்ஹா. இந்த தீர்ப்புதான் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியும் வைத்தது. இன்று வரை மற்ற மூவரும் சிறையில் வாடி வருகின்றனர் என்பதும் நினைவிருக்கலாம். இப்போது நித்தியானந்தா விவகாரம் குன்ஹாவிடம் வந்துள்ளது.